Last Updated : 31 May, 2025 04:18 PM

1  

Published : 31 May 2025 04:18 PM
Last Updated : 31 May 2025 04:18 PM

“எங்காவது போய்விட வேண்டும்... உயிரோடு இருக்கக் கூடாது!” - பாமக குழப்பதால் ஜி.கே.மணி வேதனை

ஜி.கே.மணி | கோப்புப்படம்

தைலாபுரம்: “நான் இரண்டு முடிவு எடுத்துள்ளேன். உங்களுக்கும், என்னுடைய குடும்பத்துக்கும், இந்த நாட்டுக்கும் தெரியாமல், எங்காவது போய்விட வேண்டும். அதாவது, யார் கண்ணிலும் படாமல் ஓடிப்போய்விட வேண்டும். அப்படி இல்லை என்றால் நான் உயிரோடு இருக்கக்கூடாது. இந்த இரண்டுதான் என்னுடைய முடிவு என்ற நிலையில் இருக்கிறேன்,” என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி இன்று (மே 31) தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “இதை நான் சொல்லக்கூடாது. சொன்னால் பாமக நிறுவனர் ராமதாஸ் என் மீது கோபப்படுவார். வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்திக்க வேண்டாம். செய்தியாளர்கள் ஏதாவது கேட்பார்கள், எனவே செய்தியாளர் சந்திப்பு வேண்டாம் என்று கூறிவிட்டுத்தான் சென்றோம். ஆனால், ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அது பெரிய செய்தி ஆகிவிட்டது.

அதன் தொடர் நிகழ்வுகள் மனதை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளது. என்னைப் பொறுத்தவரை உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பாமக கட்சியினரும் அதைத்தான் விரும்புகின்றனர். ராமதாஸ்- அன்புமணி இருவரும் சந்தித்துக் கொள்ள வேண்டும், என்று முயற்சி எடுக்கிறேன். அன்புமணி ராமதாஸிடம் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வருகிறேன். நேற்று ஒருநாள்தான் அவருடன் பேசவில்லை. சுமுகமான சூழல் வரும் என்று கூறுகிறார்கள். ஆனால் அது வரவில்லை.

இடையில் பல நெருக்கடிகள் நிகழ்ந்து வருவது மிகவும் கஷ்டமாகவும், வேதனையாகவும் இருந்தது. ஊடகங்கள், வார இதழ்கள், சமூக ஊடகங்கள், எங்களது கட்சியைச் சேர்ந்தவர்களேகூட ராமதாஸ் - அன்புமணி இடையிலான விரிசலுக்கு காரணம் என்ற செய்தியை பதிவிடுகிறார்கள். இதை எப்படி என்னால் தாங்கிக்கொள்ள முடியும். நான் அப்படிப்பட்ட மனிதனும் இல்லை. அந்த செய்தியைப் பார்த்தவுடன் கண்ணீர்விட்டு அழுதேன் நான். கட்சிக்காக உண்மையாக உழைப்பது ராமதாஸ், அன்புமணி பாமகவினருக்கு தெரியும். என்னைப் பார்த்து இவ்வாறு கூறுவது கஷ்டமாக உள்ளது. 10.5 சதவீத இடஒதுக்கீடு கிடைப்பதற்கு, நான் எடுத்த முயற்சி, பட்ட கஷ்டத்தை வெளியே சொல்ல முடியாது.

பாமக நிறுவனர் ராமதாஸிடம் ஒருமுறை அல்ல, பலமுறை கூறிவிட்டேன். என்னுடைய மனவேதனைகளை உங்களிடம் குமுறுகிறேன், என்றுகூறி கோபமாகவும் சொன்னேன். நான் இரண்டு முடிவு எடுத்துள்ளேன். உங்களுக்கும், என்னுடைய குடும்பத்துக்கும், இந்த நாட்டுக்கும் தெரியாமல், எங்காவது போய்விட வேண்டும். யார் கண்ணிலும் படாமல் ஓடிப்போய்விட வேண்டும். அப்படி இல்லை என்றால் நான் உயிரோடு இருக்கக்கூடாது. இந்த இரண்டுதான் என்னுடைய முடிவு என்ற நிலையில் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

எவ்வளவு கஷ்டமாக இருந்தால் இதையெல்லாம் நான் பேசுவேன். ஊடகத்தில் சொல்லக்கூடிய செய்தியா இது? . எனக்கு எவ்வளவு வேதனை இருந்தால், இதையெல்லாம் நான் கூறுவேன்? . இதற்கெல்லாம் என்ன காரணம். எங்கள் கட்சியில் நடக்கக்கூடிய ஒவ்வொரு சம்பவமும் வேதனையாக இருப்பதால், சரிசெய்ய வேண்டும் என்பதற்காகத்தான் கூறுகிறேன்.

அன்புமணி- ராமதாஸ் பிரிவினைக்கு காரணம் ஜி.கே.மணி என்பது, அல்லது மற்றவர்கள் காரணம் என்று கூறுவது, இன்னொரு அரசியல் கட்சி காரணம் என்று சொல்வதெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பாமக நிறுவனர் ராமதாஸ் 45 ஆண்டுகாலம் அரசியல் செய்தவர். அவர் என்ன விவரம் இல்லாதவரா? அதேநேரத்தில் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்து சாதனை புரிந்தவர். அரசியல் அனுபவம் உள்ளவர்.

அவர்கள் இருவருக்கும் யாராவது சொல்லியா தெரிய வேண்டும்? யார் சொல்லியும் இந்த பிளவு வரவில்லை. மற்றவர்கள் கூறுவதுபோல் அதெல்லாம் காரணமும் இல்லை. சில சந்தர்ப்ப சூழல், சில நிகழ்வுகள் அப்படி நடந்துவிட்டது. அதை சரிசெய்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அனைவரும் முயற்சிக்கிறோம். அது நடக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். ராமதாஸும் அன்புமணியும் சீக்கிரம் சந்திக்க வேண்டும், பேச வேண்டும் என்ற எண்ணம்தான் எங்களுக்கு இருக்கிறது. இருவரும் ஒன்றாக சந்தித்துவிட்டால், எங்கள் இயக்கம் வீறுகொண்டு எழும். அவர்கள் சந்தித்துவிட்டால், எங்கள் கட்சிக்கு மிகப்பெரிய வளர்ச்சியையும், தேர்தலில் மிகப்பெரிய வெற்றியையும் தரும்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x