Last Updated : 31 May, 2025 03:26 PM

 

Published : 31 May 2025 03:26 PM
Last Updated : 31 May 2025 03:26 PM

“சின்ன சின்ன குழப்பங்களை சரிசெய்துவிடுவேன்!” - பாமக நிர்வாகிகளிடம் அன்புமணி உறுதி

அன்புமணி ராமதாஸ் | கோப்புப்படம்

சோழிங்கநல்லூர்: “பாமகவைப் போல எந்த கட்சியும் தமிழ்நாட்டில் கிடையாது. நம் லட்சியம், கனவு பாமக தமிழகத்தை ஆள வேண்டும் என்பதே. அதற்கான நேரம் வந்திருக்கிறது. அது நிச்சயமாக நடக்கும். அடுத்தக் கட்டத்துக்கு நாம் செல்ல வேண்டும். மனு கொடுக்கும் கட்சி என்ற நிலையில் இருந்து மனு வாங்குகின்ற கட்சி என்ற நிலைக்கு வர வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில், இரண்டாவது நாளாக பாமக மாவட்ட நிர்வாகிகள் உடன், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்றும் (மே 31) ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், பாமக எம்எல்ஏக்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி பங்கேற்கவில்லை. அதேபோல், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், எம்எல்ஏ அருள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: “ஒரு முக்கியமான வேலை திட்டத்துக்காக இன்று நாம் இங்கு கூடியிருக்கிறோம். நம் கட்சியை பலப்படுத்தவும், வலுப்படுத்தவும் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஏற்கெனவே உறுப்பினர்களாக இருப்பவர்களின் உறுப்பினர் அட்டைகளை புதுப்பிக்க வேண்டும். நேற்று தான் நான் என்னுடைய புதிய உறுப்பினர் அட்டையை வாங்கினேன். எனக்கு அந்த அட்டையை பாமக வட்டச் செயலாளர் மோகன்ராம் தான் கொடுத்தார்.

நீங்கள் எவ்வளவு பெரிய பொறுப்புகளில் இருந்தாலும், அந்த வட்டத்தின் செயலாளர்தான் உறுப்பினர் அட்டையைக் கொடுக்க வேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ் நம்முடைய குலசாமி, குலதெய்வம். அவர் ஒரு கொள்கை வழிகாட்டி. இந்த கட்சியை அவர்தான் தொடங்கியிருக்கிறார். அவருடைய 45 ஆண்டுகால உழைப்பு, தொலைநோக்கு சிந்தனை, சமூகநீதி உட்பட அனைத்தும் அவர் நமக்கு கற்றுக்கொடுத்தது. அவருடைய கொள்கைகள் அனைத்தையும் நாம் கடைபிடித்து, முன்னேறுவோம், வெற்றி பெறுவோம். அதில் மாற்றுக்கருத்து கிடையாது.

தமிழ்நாட்டை இத்தனை காலமாக யார் யாரோ ஆண்டார்கள். இனி அது நம்முடைய காலம். அது நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதற்காகத்தான் இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம், நமது கட்சியின் வளர்ச்சிக்கான செயலாக செய்து வருகிறோம். உலகளவில் பேசப்படும் வகையில் அண்மையில் மிகப்பெரிய மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம். இளைஞர்கள் மனதில், அந்த மாநாட்டின் தாக்கம் இன்றுவரை இருக்கிறது. எனவே, அவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.

புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்க வேண்டும். கிளை நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்க வேண்டும். இந்த வேலைகளை மூன்று வாரங்களில் முடிக்க வேண்டும். கடந்த காலத்தில் நான் நிறைய பார்த்துவிட்டேன். ஒரு தொகுதியில் 1.50 லட்சம் பாமக உறுப்பினர்கள் உள்ளனர். அந்த தொகுதியில் நாம் வாங்கிய வாக்குகள் 65 ஆயிரம்தான். ஆனால், ஒன்றரை லட்சம் உறுப்பினர்கள் இருந்தார்கள்.

உறுப்பினர்களின் செல்போன் எண் எல்லாம் வேறு கொடுத்தார்கள். நான் அழைத்துப் பார்த்தால், பிஹாரில் உள்ளவர்கள் போனை எடுக்கின்றனர். அதுபோன்ற செயல்களை தயவுசெய்து செய்யாதீர்கள். எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், உண்மையான உறுப்பினர்கள் எனக்கு வேண்டும். யார் அதிகமாக உறுப்பினர்களை சேர்க்கிறார்களோ அவர்களுக்கு செயினோ, மோதிரமோ நான் போடமாட்டேன்.

கட்சி பொறுப்பாளர்கள் உங்களுடைய பொறுப்புகளை அனைவர் உடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில், நான் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறேன். விரைவில் அந்த பயணம் குறித்து அறிவிப்பேன். எனவே, அடுத்தடுத்து நாம் பல வேலைத்திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம். நீங்கள்தான் கட்சி. இந்த கட்சி என்னுடைய சொத்தோ, யார் சொத்தோ கிடையாது.

கட்சியில் சின்ன சின்ன குழப்பங்கள் வருகிறது. அதையெல்லாம் சரிபடுத்திவிடுவேன். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு, உங்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவன் நான். பாமகவைப் போல எந்த கட்சியும் தமிழ்நாட்டில் கிடையாது. நம் லட்சியம் கனவு பாமக தமிழகத்தை ஆள வேண்டும். அதற்கான நேரம் வந்திருக்கிறது. நிச்சயமாக நடக்கும் அது. அடுத்தக் கட்டத்துக்கு நாம் செல்ல வேண்டும். மனு கொடுக்கும் கட்சி என்ற நிலையில் இருந்து மனு வாங்குகின்ற கட்சி என்ற நிலைக்கு வர வேண்டும்.

நம் கட்சி குறித்த விமர்சனங்களை தூசி தட்டுவதைப் போல தட்டிவிட்டு வேலையைப் பாருங்கள். நமக்கு வேலை இருக்கிறது. நம்மைப் போன்ற தகுதியானவர்கள் தமிழ்நாட்டில் வேறு யாராவது இருக்கிறார்களா? நான் சவால் விட்டு கூறுகிறேன். அதுதான் உண்மை. நான் இருக்கிறேன் நீங்கள் தைரியமாக இருங்கள். யாரும் உங்களை எதுவும் செய்யமுடியாது. கட்சிக்கு உள்ளும், வெளியேயும் யாரும் எதுவும் செய்ய முடியாது.

இன்னும் 8-10 மாதத்தில் தேர்தல் வருகிறது. நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியை இந்த தேர்தலில் நாம் பெறுவோம். அதற்கான வியூகங்களை அமைத்து வருகிறோம். அவுங்களா, இவுங்களா என்ற எண்ணம் எல்லாம் வேண்டாம். நம்முடைய இயக்கம் ஒரே இயக்கம்தான்,” என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x