Published : 31 May 2025 06:10 AM
Last Updated : 31 May 2025 06:10 AM
சென்னை: சிறுநீரகம் காக்கும் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 33,869 பேருக்கு பாதிப்புக்கான அறிகுறி கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் விதமாக தமிழகத்தில் ‘சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டம்’ கடந்த 2023 ஜூலை 10-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், அந்தந்த கிராமத்திலேயே சிறுநீரக பரிசோதனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கிராம சுகாதார செவிலியர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்களை கொண்டு, துணை சுகாதார நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: விவசாய தொழிலாளர்கள், கட்டிட வேலை செய்வோருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுதவிர, தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் என 2 கோடி பேர் உள்ளனர். சிறுநீரக செயலிழப்பால் இவர்களும் பாதிக்கப்படக்கூடும்.
1.07 கோடி பேருக்கு பரிசோதனை: இதனால், சிறுநீரக பரிசோதனை திட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறோம். 1.07 கோடி பேருக்கு பரிசோதனை செய்ததில் 33,869 பேருக்கு ஆரம்பகட்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையிலேயே சிறுநீரக பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுவதால் சிறுநீரக செயலிழப்பை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT