Published : 31 May 2025 06:30 AM
Last Updated : 31 May 2025 06:30 AM
சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் இடம் ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை, தேமுதிக பொருளாளர் சுதீஷ் நேற்று சந்தித்து பேசினார். கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டியிட்டது. அந்த கூட்டணியில் 5 இடங்கள் தேமுதிகவுக்கு வழங்கப்பட்டன. ஒரு மாநிலங்களவை இடமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதாக தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அதிமுக அதற்கு மறுப்பு தெரிவித்தது.
தற்போது உறுதி அளித்தபடி தங்களுக்கு ஓரிடத்தை அதிமுக வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதிஷ் நேற்று சந்தித்துப் பேசினார்.
அப்போது சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்புவதாகவும், தற்போது மாநிலங்களவை தேர்தலில் தங்களுக்கு ஓரிடம் வழங்க வேண்டும் எனவும் சுதிஷ் தரப்பில் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து பதில் அளிப்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT