Published : 31 May 2025 08:33 AM
Last Updated : 31 May 2025 08:33 AM
திமுக கூட்டணியில் விசிக நீடித்து நிலைக்குமா நிலைக்காதா என விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவை முனவைத்து திமுக-வுக்கும் விசிக-வுக்கும் கசகல் வெடித்திருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் சாலையோரத்தில் அம்பேத்கருக்கு சிலை வைக்க அப்பகுதியில் உள்ள பட்டியலினத்து மக்கள் முடிவெடுத் தார்கள். இதற்காக சிலை அமைப்புக் குழு அமைக்கப்பட்டு சிலையும் தயாரானது. இந்த நிலையில் மே 23-ம் தேதி, கந்தர்வக்கோட்டை அருகிலுள்ள மங்களாகோவிலில் மாநில அளவிலான கபடி போட்டிகளை நடத்தியது திமுக.
இந்தப் போட்டிகளை தொடங்கி வைக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார் என்றதும், அவர் கையாலாயே அம்பேத்கர் சிலையையும் திறந்துவைக்க சிலர் முனைப்புக் காட்டி இருக்கிறார்கள். ஆனால், சிலை அமைப்புக் குழுவினர் இதற்கு ஆட்சேபம் தெரிவித்ததுடன், விசிக தலைவர் திருமாவளவன் தான் சிலையை திறந்துவைக்க வேண்டும் என பிடிவாதம் பிடித்திருக் கிறார்கள். அதேசமயம், சிலை திறப்பு நிகழ்ச்சி குறித்து முன்கூட்டியே உதயநிதிக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதால், நிகழ்ச்சி நிரலை மாற்றமுடியாமல் திகைத்துப் போனது திமுக தரப்பு.
இந்தத் தகவல்கள் எல்லாம் தீயாய் பரவியதும், 'யாரோ சிலை அமைக்க... யார் யாரோ வந்து பெயர் எடுத்துக் கொள்வதா' என்றெல்லாம் திமுக-வுக்கு எதிராக விசிக-வினர் சமூக வலைதளங்களில் வரிந்து வரிந்து எழுதித் தள்ளினர். இதையடுத்து, பிரச்சினை பெரிதானதால் விழாவுக்கு திருமாவளவனையும் அழைத்து வந்து கொதிப்பை அடக்க முடிவெடுத்திருக்கிறார்கள். திருமாவும் இந்த நிகழ்ச்சிக்கு வருகிறார் என்று சொன்ன பிறகும் கொதிப்பு அடங்கவில்லை.
உதயநிதியை வரவேற்று திமுக-வினர் ஒருபக்கம் ஃபிளெக்ஸ்களை வைக்க, திருமாவை வரவேற்று விசிக-வினரும் ஃபிளெக்ஸ்களை தூக்கி நிறுத்தினர். விசிக-வினர் வைத்திருந்த பெரும்பாலான ஃபிளெக்ஸ்களில் உதயநிதி படம் இல்லை. அதேபோல், திமுக-வினரின் ஃபிளெக்ஸ்களில் திருமா படத்தைப் போடாமல் தவிர்த்துவிட்டனர்.
இதனிடையே விழாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒலிபெருக்கியில் திமுக-வின் கொள்கைப் பாடல்களை முழக்கினார்கள். இதைக் கேட்டுவிட்டு திரண்டு வந்த விசிக-வினர், திமுக பாடல்களை நிறுத்தும்படி நிர்பந்தம் செய்தனர். இதனால் வேறு வழியின்றி திமுக பாடல்கள் நிறுத்தப்பட்டு அம்பேத்கர் மற்றும் திருமா புகழ்பாடும் பாடல்கள் ஒலித்தன.
இதனிடையே, வருவாய்த்துறை அதிகாரிகள் இரு தரப்பையும் சமாதானம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, திமுக-வினர் தாங்கள் வைத்த ஃபிளெக்ஸ் போர்டுகளை தாங்களாகவே அப்புறப்படுத்தினர். நல்ல வேளையாக, நிகழ்ச்சி தொடங்கும் முன்பாக மழை கொட்ட ஆரம்பித்ததால் கூட்டம் கலைந்து அதிகாரிகள் கொஞ்சம் ஆசுவாசமானார்கள். மின்சாரமும் துண்டிக்கப்பட்ட நிலையில், கொட்டும் மழைக்கு நடுவே உதயநிதியும் திருமாவும் அங்கு வந்து சேர்ந்தார்கள்.
இதையடுத்து, திட்டமிட்டபடி உதயநிதி அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார். அதன்பிறகு திருமாவுடன் சேர்ந்து இருவரும் சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து இருவரும் குடைக்குள் நின்றபடி திமுக-வையும் விசிக-வையும் போட்டிபோட்டு புகழ்ந்து பேசி, கொதிப்பில் இருந்த இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளையும் கூல்படுத்தினார்கள்.
அம்பேத்கர் சிலையை திறப்பதில் ஏன் இத்தனை சிக்கல் என கந்தர்வக்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மங்களாகோவில் பரமசிவத்திடம் கேட்டதற்கு, “ கபடி போட்டியைத் தொடங்கி வைப்பதோடு அம்பேத்கர் சிலையையும் திறந்து வைக்க சிலை அமைப்புக் குழுவோடு சென்று தான் உதயநிதியிடம் தேதி வாங்கி வந்தோம்.
ஆனால், அதன் பிறகு அவர்களுக்குள் என்ன பிரச்சினை ஏற்பட்டதோ தெரியவில்லை... திருமா தலைமையில்தான் விழாவை நடத்த வேண்டும் என்றார்கள். அதனால் தான் குழப்பம் வந்துவிட்டது. ஃபிளெக்ஸ் வைப்பதெல்லாம் உதயநிதிக்கு அவ்வளவாய் பிடிக்காது. அதனால், நாங்கள் வைத்த ஃபிளெக்ஸ்களை நாங்களே எடுத்துவிட்டோம்” என்றார்.
கந்தர்வக்கோட்டை தொகுதி விசிக செயலாளர் பாலுவிடம் இதுகுறித்து கேட்டதற்கு, “பொது நிகழ்ச்சிங் கிறதால திமுக பாடலை போட வேண்டாம் என்று சொன்னோம். அதேபோல், அவர்கள் வைத்த பேனர்களை அவர்களாகவே எடுத்துட்டாங்க. ஆனாலும் நாங்க எடுக்க முடியாதுன்னு சொல்லிட்டோம்” என்றார்.
திமுக கூட்டணியை உடைப்பதற்கு பலமுனைகளிலும் இருந்து ’பாச’ அம்புகள் வீசப்படும் நிலையில், அம்பேத்கர் சிலையை திறக்க உதயநிதியை இழுத்து வந்து தேவையற்ற சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது புதுக்கோட்டை திமுக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT