Published : 31 May 2025 04:45 AM
Last Updated : 31 May 2025 04:45 AM
சென்னை: நகைக்கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக புதிதாக 9 கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த வரைவை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளைத் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘‘தங்க நகைக்கடன் பெறுவதற்காக ரிசர்வ் வங்கியால் முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி, மத்திய நிதியமைச்சருக்கு நான் எழுதிய கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
சிறிய தொகைகளை, குறிப்பாக ரூ.2 லட்சத்துக்கு கீழ், கடன்பெறும் உழவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்குத் தக்க நேரத்தில், எளிதில் கடன் கிடைக்க வேண்டும் என்பதைத்தான் தொடர்ந்து நான் வலியுறுத்தி வந்துள்ளேன்.
அந்த வகையில், நான் கடிதம் எழுதிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதைப் பாராட்டும் அதேவேளையில், ஏழை எளிய மக்கள் மீது பெரும் தாக்கம் செலுத்தும் இதுபோன்ற கொள்கை முடிவுகளை மாநிலங்களுடன் உரிய முறையில் கலந்தாலோசித்த பிறகே, இனி முடிவுசெய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செயல்படும் நிதி சேவைகள் துறை, தங்கக் கடன் பெறும் நடைமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட வரைவுத் தர நெறிகளை முறைப்படுத்த வேண்டி பரிந்துரைகள் வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ரூ.2 லட்சத்துக்கு கீழ் கடன் பெறும் சிறு தொகை கடன் பெறுநர்களுக்கு விலக்கு அளிக்க பரிந்துரை செய்திருக்கிறது.
இருப்பினும் விவசாயிகள், சிறு வியாபாரிகள் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்கள், தங்களின் அவசரத் தேவைகள், மருத்துவ மற்றும் கல்வி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒன்றாக தங்க நகைக் கடன்கள் உள்ளன. அதனால் அனைத்து தங்க நகைக் கடன்களுக்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: தங்க நகைக் கடன் தொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிமுறைகள் தொடர்பாக பொதுமக்களின் பிரச்சினைக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக தலையிட்டு தீர்வு கண்டிருப்பதை நான் வரவேற்கிறேன். எப்போதும் சாதாரண மக்களின் குரலைக் கேட்டு அவர்களுக்கு செவி சாய்க்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.
பாமக தலைவர் அன்புமணி: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த விதிமுறைகளில் 2 தளர்வுகளைச் செய்யும்படி மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இவை போதுமானவை அல்ல.
தங்க நகைக் கடன் என்பது நடைமுறை சிக்கல்கள் இல்லாமல் எளிதாக கடன் வாங்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான். புதிய விதிகளின் மூலம் அதை சிக்கலாக்கக்கூடாது. எனவே, நகைக்கடன்கள் தொடர்பாக இப்போதுள்ள நடைமுறைகளே தொடர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT