Published : 31 May 2025 12:49 AM
Last Updated : 31 May 2025 12:49 AM
பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை கட்சியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று சென்னையில் நடந்த பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சி தலைவர் அன்புமணி உறுதிபட தெரிவித்தார்.
பாமகவில் கட்சி நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையிலான மோதல் நேற்று முன்தினம் உச்சகட்டத்தை எட்டியது. ‘அன்புமணிக்கு பக்குவம் சபை நாகரிகம், தலைமை பண்பு கிடையாது. 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கியது நான் செய்த மிகப்பெரிய தவறு’ என்று ராமதாஸ் கடுமையாக குற்றம்சாட்டினார். தேவைப்பட்டால், பொதுக்குழுவை கூட்டி கட்சியில் இருந்து அன்புமணியை நீக்கவும் முடியும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன் அன்புமணி நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னை சோழிங்கநல்லூரில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கான பாமக நிர்வாகிகளுக்கான உறுப்பினர் அட்டை புதுப்பித்தல், புதிய உறுப்பினர் அட்டை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை அவர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து காலை முதல் மாலை வரை கருத்துக்களை கேட்ட பிறகு நிர்வாகிகள் மத்தியில் உற்சாகமாகவும், நகைச்சுவையுடனும் பேசினார். அப்போது, ராமதாஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகள், தனது செயல்திட்டங்கள், ஆதங்கம் போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் அவரது பேச்சு அமைந்திருந்தது.
அன்புமணி பேசியதாவது: நம் மிகப்பெரிய மாநாட்டின் வெற்றிக்கு நிர்வாகிகளே முழு முதல் காரணம். வரும் காலம் நம் காலம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. முக்கிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். தற்போதைய குழப்பங்கள் எல்லாம் தற்காலிகமானவை. இதை சரி செய்துவிடுவேன்.
உறுப்பினர் சேர்க்கை போன்று கட்சி நிர்வாகிகளுக்கு அளித்த பணிகளை 3 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும். இதை பனையூர் அலுவலகத்தில் இருந்து கண்காணிப்பேன். இதற்கான செயலியை இரண்டு ஆண்டுகளுக்கு முன் தயாரித்த போதும் வெளியிடும் சூழல் வரவில்லை. இதன் மூலம் கிளை செயலாளர் முதல் என்னுடன் நேரடி தொடர்பு கொள்ளலாம்.
நான் வகிக்கும் பொறுப்பை பொதுக்குழுதான் முடிவு செய்யும். நானோ, பொதுச்செயலாளரோ பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். பொதுக்குழு நினைத்தால் தான் எங்களை நீக்க முடியும். இது கட்சியின் விதிகள். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொதுக்குழுவால் நாங்கள் தேர்வு செய்யப்பட்டோம். நிர்வாகிகளின் பொறுப்பு மாற்றப்பட்டால் கவலை கொள்ள வேண்டாம். அடுத்த 10 நிமிடங்களில் அவர்களே தொடர்வார்கள் என கடிதம் வரும். என் கடிதம் தான் செல்லும்.
எவ்வளவோ, பதவி பொறுப்பை பார்த்துவிட்டேன். என்னை தலைவராக பார்க்கவில்லை. அனைவரை போல அடிமட்ட தொண்டன், தலைமை தொண்டனாக இருக்கிறேன். மனதில் இருப்பதை வெளிப்படையாக பேச முடியவில்லை. கட்சித் தலைவராக தேர்வானதில் இருந்து எனக்கு மனஉளைச்சல் தான். நேற்று முன்தினம் விடுதலை கிடைத்தது. இனி நாம் வேகமாக பயணிக்கலாம். வரும் தடைகளை உடைத்தெறிந்து முன்னேறுவோம். அதே நேரம், பாமகவை தொடங்கிய ராமதாஸின் கொள்கைகளை கடைபிடிப்போம். அதன்படி பாமகவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வோம். பாமகவை பலப்படுத்தி வரும் தேர்தலில் நம் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அடுத்தகட்டமாக பாமக ஆட்சி நடைபெற வேண்டும். நமது மாற்றம் முன்னேற்றம் அன்புமணி பிரச்சாரம் வெற்றியடைந்தாலும் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருந்ததால் நம்மால் வெற்றி பெற முடியவில்லை. இதே பிரச்சாரத்தை 2019-ல் செய்திருந்தால் நாம் ஆளுங்கட்சியாக இருந்திருப்போம். அப்போது செய்ய முடியாத சூழலுக்கான காரணம் நிர்வாகிகளுக்கு தெரியும்.
எவ்வளவோ சோதனை, அவமானம், அபாண்டமான பழிகளை சந்தித்திருக்கிறேன். இவை அனைத்தும் என்னை உறுதிப்படுத்தியிருக்கிறது. யார் பழிபோட்டாலும் கண்டு கொள்ள மாட்டேன். உலகில் நான் மிகவும் நேசிப்பது அம்மாதான். அவர்கள் நேசிப்பது என்னை தான். ஒரு துரும்புகூட அவர் மீது படவிடமாட்டேன். ஆனால் அபாண்டமான வார்த்தைகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதுவும் கடந்துபோகும்.
எனக்கு நல்ல அணி கிடைத்திருக்கிறது. இந்த அணியை வைத்து ஆட்சிக்கு வர முடியாதா என்ன. இந்த அணியை குழப்ப சூழ்ச்சிகள் நடந்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. உரிமை மீட்பு பயணம், சாதிவாரி கணக்கெடுப்பு என அடுத்தடுத்த செயல்திட்டங்கள் இருக்கின்றன. இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த இப்போது எனக்கு சுதந்திரம் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து இன்றும், நாளையும் நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்துகிறார்.
பொருளாளர் பொறுப்பில் இருந்து திலகபாமாவை நீக்குவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து, திலகபாமாவே பொருளாளராக தொடர்வார் என அன்புமணி அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்தினார். மேலும், கட்சி உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் பணிகளில் பொருளாளர் என்ற அடிப்படையில் திலகபாமா கையெழுத்திட்டார். புதிய உறுப்பினர் அட்டையில் தியாகராய நகரில் உள்ள பாமக தலைவர் அன்புமணியின் இல்ல முகவரியே பாமக அலுவலக இடம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நிர்வாகிகளிடையே பேசும்போது, மாவட்டச் செயலாளர் சிவகுமாரை அழைத்து நியமன கடிதத்தை அன்புமணி வழங்கினார். தொடர்ந்து அவர், "நீ தான் 3 மாவட்டங்களுக்கும் செயலாளர், உன்னை யாராலும் மாற்ற முடியாது. பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சித் தலைவர் தான் மாற்ற முடியும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT