Last Updated : 30 May, 2025 04:10 PM

4  

Published : 30 May 2025 04:10 PM
Last Updated : 30 May 2025 04:10 PM

ராமதாஸ் - அன்புமணி மோதலில் பாஜகவுக்கு தொடர்பில்லை: நயினார் நாகேந்திரன் உறுதி

நயினார் நாகேந்திரன் | கோப்புப்படம்

திருநெல்வேலி: “பாமக உட்கட்சி விவகாரங்களுக்கும், குறிப்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதலுக்கும் பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று கூறும்போது, “2024 மக்களவை தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தினேன். அதேநேரம் அன்புமணியும், சவுமியாவும், ‘பாஜகவுடன் கூட்டணி என்பதை ஏற்க வேண்டும்’ என்று எனது கால்களை பிடித்துக் கொண்டு அழுதனர். மறுநாள் காலை, தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை வந்துவிட்டார். எனக்கு தெரியாமல் பெரிய விருந்து வைக்கப்பட்டது. பாஜக உடனான கூட்டணி ஏற்பாடுகளை சவுமியா முன்கூட்டியே செய்துவிட்டார். நான் கூறியபடி அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், 3 இடங்களில் பாமக வெற்றி பெற்றிருக்கும். சின்னமும் கிடைத்திருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திருநெல்வேலியில் இன்று (மே 30) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையிலான மோதலுக்கு பின்னால் பாஜக இருப்பதாக கூறப்படுவது முற்றிலும் வேடிக்கையாக இருக்கிறது. பாஜகவுக்கும் பாமகவின் உட்கட்சி பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும், தொடர்பும், பின்னணியும் கிடையாது. இது முழுக்க முழுக்க அவர்களின் உட்கட்சி பிரச்சினை. அதைப் பற்றி கருத்து கூறவும் முடியாது. உட்கட்சி பிரச்சினைகளில் நாம் தலையிடுவது சரியானதாக இருக்காது.

திருநெல்வேலியில் மட்டுமல்லாமல், அனைத்து மாநகராட்சிகளிலும் மஞ்சள்காமாலை போன்ற நோய்கள் பரவி வருகின்றன. கரோனா 3-வது அலை வருவதாகவும் கூறுகிறார்கள். திருநெல்வேலி மாநகராட்சியில் மட்டும் 200-க்கும் மேற்பட்டோர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். அனைத்து மாநகராட்சிகளிலும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

சேலம் மாநகராட்சியில் திமுகவை சேர்ந்தவர்கள் ஒரு கவுன்சிலரை கைநீட்டி அடிப்பது போன்ற காட்சிகளெல்லாம் வந்துள்ளன. ராணிப்பேட்டையில் 10-ம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து கொலை செய்திருக்கிறார்கள். மற்றொரு மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது முழுக்க முழுக்க சட்டம் - ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது. காவல் துறையினர் சரியாக எங்கேயுமே நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. கேட்டால் நாங்கள்தான் உண்மையான ஆட்சி செய்கிறோம் என முதல்வர் மார்தட்டி பேசுகிறார்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க அரசு நவடிக்கை எடுக்க வேண்டும். குளங்களில் மணலை அள்ளி தூர்வாரி வைத்தால் அதிகளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.

கமல்ஹாசன் மீது காட்டம்: தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். ஒரு மனிதனுக்கு தாய் மீது பற்று இருக்க வேண்டும். தாய்நாடு மீதும் பற்று இருக்க வேண்டும். தலைவராக இருக்கக்கூடிய அதுவும் குறிப்பாக நடிகர் கமல்ஹாசன், அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை. இது போன்ற கருத்துகளை அவர் தவிர்த்திருக்க வேண்டும்.

கன்னடத்தை பூர்விகமாகக் கொண்ட ஒரு முதல்வரால் தனக்கு பிரச்சினை வந்தது என்று கமல்ஹாசன் கூறியது தேவையில்லாத பேச்சு. யாருடைய பூர்விகத்தை எடுத்து பார்த்தாலும் பல்வேறு பிரச்சினைகள் வரும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒருமுறை படப்பிடிப்புக்காக பெங்களூரு சென்றிருந்தபோது, அங்கிருந்தவர்கள் ஜெயலலிதாவிடம், கன்னடம் வாழ்க என்று கூறச்சொன்னார்கள். ஆனால், அந்த நேரத்தில் ஜெயலலிதா, உயிரே போனாலும் சொல்ல மாட்டேன் என்று கூறினார். நடிகர் கமல்ஹாசன் பேசிய கருத்து வருந்தத்தக்கது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 2 குட்டி யானைகள் உள்ளன. அதை நெல்லையப்பர் கோயிலுக்கு வழங்குவதற்கு அவர்கள் தயாராக உள்ளார்கள். விதிமுறைகள் பின்பற்றி முதல்வரிடம் பேசி யானை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று நயினார் நாகேந்திரன் கூறினார். அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் யார் என்ற கேள்விக்கு, “அதை எடப்பாடி பழனிசாமியிடம்தான் கேட்க வேண்டும்,” என்று அவர் பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x