Last Updated : 30 May, 2025 01:36 PM

5  

Published : 30 May 2025 01:36 PM
Last Updated : 30 May 2025 01:36 PM

“பாமக யாருடைய தனிச் சொத்தும் கிடையாது” - அன்புமணி ராமதாஸ் பேச்சு

சென்னை: "தமிழ்நாட்டின் வளர்ச்சிதான் நமது இலக்கு. எனவே நமக்குள் வேற்றுமைகள் எதுவும் இருக்கக்கூடாது. அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படவேண்டும்" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அன்புமணி ராமதாஸ் இன்று பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், "அனைத்து சொந்தங்களுக்கும் வணக்கம். பாமகவின் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் புதுப்பித்தல் சம்மந்தமாக 5 மாவட்டத்தின் செயலாளர்கள், தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இங்கே கூடியுள்ளோம். இது 3 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு. நீங்கள் எல்லோரும் வேகமாக வேலை செய்து இப்பணியை முடிக்க வேண்டும்.

பாமக பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தால் தலைவராக அங்கீகாரம் பெற்றது நான்தான். எப்போதும் நான் என்று சொல்லாமல் நாம் என்றே சொல்வேன். பாமக என்பது நானோ அல்லது வேறு யாருமோ கிடையாது, நீங்கள்தான் பாமக. நீங்கள் இல்லாமல் ஒன்றும் இல்லை. பாமக யாருடைய தனிச்சொத்தும் கிடையாது.

பொதுக்குழுவில் நீங்கள்தான் என்னை தலைவராக தேர்வு செய்தீர்கள். எனவே உங்களோடு சேர்ந்து ஒரு அடிமட்ட தொண்டனாக பணியாற்றுவதை அடிப்படை கடமையாக கொண்டு செயல்படுவேன். பொறுப்புகள் வரும் போகும். உங்கள் அன்பு பாசம் எப்போதும் போகாது. இப்போது 5 மாவட்டம், மாலையில் 5 மாவட்டம், நாளை காலை மற்றும் மாலையில் தலா 5 மாவட்டங்கள் என தொடர்ந்து மாவட்ட, மாநில நிர்வாகிகளை சந்தித்து கட்சியை வலுப்படுத்த வேண்டும்.

நமது சமூகநீதிக் காவலர் ராமதாஸ் நமது கட்சியை தொடங்கினார். சமூக நீதி, சமத்துவம், சனநாயகம் என்பதே அவரின் கொள்கை. அந்த கொள்கைகளை செயல்படுத்தும் தொண்டனாக உங்களோடு களத்தில் இறங்குவேன். நம் கட்சியை போன்று சிறப்பான கொள்கைகளை கொண்ட கட்சி தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சியும் கிடையாது. தமிழ்நாட்டின் வளர்ச்சிதான் நமது இலக்கு. எனவே நமக்குள் வேற்றுமைகள் எதுவும் இருக்கக்கூடாது. அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படவேண்டும்” என்று கூறினார்.

பாமக பொருளாளராக திலகபாமா தொடர்வார் என அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவித்துள்ளார். “பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமா அவர்கள் அப்பொறுப்பில் தொடர்வார் என்று அறிவிக்கப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, திலகபாமாவை பொருளாளர் பதவியிலிருந்து நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார். புதிய பொருளாளராக சையது மன்சூர் என்பவரை நியமித்தும் அவர் அறிவித்தார்.

பாமகவில் கட்சி நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே கடந்த ஓராண்டாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது. புதுச்சேரி அடுத்த பட்டானூரில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பாமக இளைஞர் சங்க தலைவராக, தனது மகள்வழி பேரன் முகுந்தனை ராமதாஸ் நியமித்தார். கூட்ட மேடையிலேயே இதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, சமீபத்தில் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்கி, செயல் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். இந்த நிலையில், கடந்த வாரங்களில் தைலாபுரத்தில் ராமதாஸ் கூட்டிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை.

இதன் தொடர்ச்சியாக, முன்னதாக, “அன்புமணிக்கு பக்குவம், தலைமை பண்பு இல்லை. 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கியது நான் செய்த தவறு. கட்சி பிரச்சினை பற்றி பேசிய தாய் மீது பாட்டிலை வீசி எறிந்தார். வளர்த்த கடா என் மார்பில் பாய்ந்துவிட்டது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை நேற்று முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x