Published : 30 May 2025 05:47 AM
Last Updated : 30 May 2025 05:47 AM

பேருந்துகளுக்கான கட்டண உயர்வு: பொதுமக்கள் கருத்து கூற அரசு அழைப்பு

சென்னை: பேருந்துகளுக்கான கட்டண உயர்வு குறித்து கருத்து கூற பொதுமக்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் அரசு, தனியார் என மொத்தமாக 31,129 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் அரசு பேருந்துகளுக்கான கட்டணம் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரியில் சுமார் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. அதன்பின், அண்டை மாநிலங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், தமிழகத்தில் கட்டண உயர்வு இல்லை. இதனால் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குறைந்த கட்டணத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, நகர பேருந்துகளில் 10 கி.மீ-க்கு ரூ.8 - ரூ.12, புறநகர் பேருந்துகளில் 100 கி.மீ-க்கு ரூ.58 - ரூ.200 என வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த அரசுக்கு உத்தரவிடக் கோரியும், ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்கும் வகையில், உயர்மட்டக் குழுவை நியமிக்கக் கோரியும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

விசாரணையின்போது, "பேருந்து கட்டணம் நிர்ணயிக்க போக்குவரத்து துறை செயலாளர் தலைமையில், போக்குவரத்து துறை கூடுதல் செயலாளர்கள், நிதித் துறை செயலாளர், போக்குவரத்து ஆணையர் அடங்கிய உயர்மட்டக் குழு அமைத்து கடந்தாண்டு டிச.6-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அந்த உயர்மட்டக்குழு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளிக்கும்" என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ‘‘பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக கருத்து கேட்டு, தமிழக அரசின் உயர் மட்டக்குழு 4 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும்" என உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து பேருந்து கட்டண உயர்வு குறித்து கருத்து கூற, தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், "நிலை பேருந்துகளுக்கான கட்டண உயர்வு குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து நுகர்வோர் அமைப்பு மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை, போக்குவரத்து ஆணையர், கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது tc.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ 3 வார காலத்துக்குள் அனுப்பி வைக்கலாம்" என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x