Published : 30 May 2025 05:20 AM
Last Updated : 30 May 2025 05:20 AM

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆன்மிக பயணத்தை தொடங்கிய ஆளுநர் ரவி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று யானை ஆண்டாளிடம் ஆசி பெற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி.

திருச்சி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் ஸ்ரீரங்கத்தில் இருந்து நேற்று ஆன்மிக சுற்றுப் பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து, குணசீலம், ராமேசுவரம், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களில் தரிசனம் மேற்கொள்கிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், நேற்று மாலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருடன் சென்றார்.

‘ரங்கா ரங்கா’ கோபுர வாயிலில் ஆளுநருக்கு கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் தங்கக் குடத்துடன் மரியாதை அளிக்கப்பட்டது. கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் உள்ளிட்டோர் அவரை வரவேற்று கோயிலுக்குள் அழைத்து சென்றனர். கருடாழ்வார், மூலவர், தாயார் சந்நிதியில் தரிசனம் செய்த ஆளுநர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோயில் யானை ஆண்டாளுக்கு பழங்கள் கொடுத்து ஆசி பெற்றனர்.

தொடர்ந்து, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஆளுநர் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். நேற்றிரவு திருச்சியில் தங்கிய ஆளுநர் இன்று(மே 30) காலை, திருச்சி அருகே உள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் தரிசனம் மேற்கொள்ள உள்ளார்.

அதன்பின், காரில் ராமேசுவரம் சென்று ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு செய்ய உள்ளார். இன்று இரவு அங்கு தங்கும் அவர், மறுநாள்(மே 31) காலை அங்கிருந்து கார் மூலம் கிளம்பி மதுரை சென்று, மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார். பின்னர், மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். ஆளுநரின் ஆன்மிகப் பயணத்தையொட்டி, திருச்சி, மதுரை, ராமேசுவரம் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x