Published : 30 May 2025 04:18 AM
Last Updated : 30 May 2025 04:18 AM

ரூ.1,071 கோடியில் புதிய திட்டங்கள், பாலங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: நகராட்சி நிர்வாக துறை சார்பில் ரூ.572 கோடி திட்டங்கள், நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.499 கோடி திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்புகளில் கூறியிருப்பதாவது: தமிழக நகராட்சி நிர்வாக துறையின்கீழ் செயல்படும் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.30.60 கோடியில் 11 முடிவுற்ற பணிகள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் ரூ.188.55 கோடியில் 3 முடிவுற்ற பணிகள், நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில் ரூ.102.59 கோடியில் 19 முடிவுற்ற பணிகள், பேரூராட்சிகள் ஆணையரகம் சார்பில் ரூ.77.07 கோடியில் 14 முடிவுற்ற பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.60.58 கோடியில் முடிவுற்ற 2 கூட்டு குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.59.60 கோடியில் 9 புதிய திட்ட பணிகள், நகராட்சி நிர்வாக துறை சார்பில் ரூ.15.11 கோடியில் 2 புதிய திட்ட பணிகள், பேரூராட்சிகள் ஆணையரகம் சார்பில் ரூ.18.38 கோடியில் 5 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.19.44 கோடி மதிப்பிலான 50 புதிய வாகனங்களின் சேவையையும் தொடங்கி வைத்தார்.

நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் ரூ.424.38 கோடியில் நான்கு வழி சாலையாக மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை - ராசிபுரம் - திருச்செங்கோடு - ஈரோடு சாலை, மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் ரயில்வே பாதைக்கு மாற்றாக ரூ.68.38 கோடியில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம், ராணிப்பேட்டை மாவட்டம் மேல்பாக்கத்தில் ரூ.6.32 கோடியில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினருக்கான மறுகுடியமர்வு குடியிருப்புகளையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

எளிமை ஆளுமை திட்டம்: ‘எளிமை ஆளுமை’ திட்டத்தின் கீழ் 10 அரசு சேவைகளை எளிமையாக்கி மக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழக அரசால் வழங்கப்படும் சேவைகளில் தற்போதைய நடைமுறைகளை ஆராய்ந்து, அதிலுள்ள முக்கிய விதிமுறைகளை சீர்செய்து, ‘எளிமை ஆளுமை’ திட்டத்தின்கீழ் அனைவரும் சேவைகளை உடனடியாக இணைய வழியில் பெறும் வகையில் மாற்றியமைக்கப்படுகிறது.

‘எளிமை ஆளுமை’யின் மூலம், தற்போது நடைமுறையில் உள்ள நேரடி ஆய்வுகள், ஆவண சரிபார்ப்பு போன்ற முறைகளுக்கு மாற்றாக சுய சான்றிதழ், இணைய வழி - கேஒய்சி, டிஜிட்டல் கையொப்பம் இன்னும் பல வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதன்மூலமாக பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் எளிமையாக்கப்பட்ட சேவைகளை விரைவாக பெற வழிவகை செய்யப்படுகிறது.

அதேபோல், வேளாண் விரிவாக்க சேவைகளை விவசாயிகளுக்கு அவர்கள் கிராமத்திலேயே வழங்கும் வகையில் ‘உழவரைத் தேடி வேளாண்மை, உழவர் நலத்துறை’ என்ற திட்டத்தையும் காணொலி வாயிலாக திருவாரூர் மாவட்டம் மாணிக்கமங்கலம் கிராமத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x