Last Updated : 29 May, 2025 07:48 PM

 

Published : 29 May 2025 07:48 PM
Last Updated : 29 May 2025 07:48 PM

நகைக் கடன் மீதான ரிசர்வ் வங்கி விதிகளால் கூட்டுறவு வங்கிகளுக்கு பாதிப்பா? - அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்

அமைச்சர் பெரியகருப்பன் | கோப்புப்படம்

சென்னை: “நகைக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி விதித்து இருக்கும் கட்டுப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளை வெகுவாக பாதிக்காது” என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் இன்று (மே 29) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சரிடம், நகைக் கடன்களுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடு விதித்துள்ளது இது கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்துமா என்று கேட்கப்பட்டது.

அதற்கு, “ரிசர்வ் வங்கி விதித்து இருக்கும் கட்டுப்பாடுகள் பாதிக்கும். ஆனால், கூட்டுறவு வங்கிகளை வெகுவாக பாதிக்காது. விலை மதிப்பில் 75% கொடுக்கலாம் என்று கூறுகிறார்கள். அதை தான் நாம் செய்துகொண்டு இருக்கிறோம். ஆனால் ஏழை எளிய, நடுத்தர மக்களை இது வெகுவாக பாதிக்கும். இதை அறிந்த நம் முதல்வர், நடுத்தர மக்களையும் விவசாயிகளையும் பாதிக்கிது என அறிந்து நிதி அமைச்சருக்கு இதை திரும்ப பெற வேண்டும் என கடிதம் எழுதி வலியுறுத்தியிருக்கிறார்,” என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பதிலளித்துள்ளார்.

நிதி அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்: முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தங்கத்தை பிணையாகப் பெற்று வழங்கப்பெறும் கடன்கள் சரியான நேரத்தில், குறுகிய கால பயிர்க்கடன்களுக்கான முதன்மை ஆதாரமாக விளங்குகிறது. குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள், குத்தகைதாரர்கள் மற்றும் பால் பண்ணை, கோழிப்பண்ணை மற்றும் மீன்வளம் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த வரைவு நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் பாதிப்படையக்கூடும்.

அதனால். தமிழகத்திலும் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் கிராமப்புற கடன் விநியோக முறைக்கு கடுமையான இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெரும்பாலும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முறையான நில உரிமைகள் அல்லது சரிபார்க்கக்கூடிய வருமான ஆவணங்கள் இல்லை. அத்தகைய விவசாயிகள் தங்கள் வீட்டுத் தங்கத்தை அடகு வைத்து வங்கிக் கடன்களைப் பெறுவதற்கான ஒரு சாத்தியமான மற்றும் கண்ணியமான வழியாக நகைக்கடன் உள்ளது. தற்போது முன்மொழியப்பட்டுள்ள நெறிமுறைகள் எளிதாகக் கடன் பெறும் வழியை நேரடியாகக் குறைப்பதுடன், கடன் வாங்கும் பெரும்பாலானோரை முறையான கடன் வழங்கும் நிதி நிறுவனங்களை நாடுவதையும் குறைத்துவிடும்.

நகைக்கடன் பெறும் எளிமையான வழிமுறைகள் கட்டுப்படுத்தப்படுவதால், கிராமப்புற கடன் வாங்குபவர்கள் அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கும் முறைசாரா மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கடன் வழங்கும் நிறுவனங்களை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இது அவர்களை சுரண்டல் நடைமுறைகளுக்கு ஆளாக்குவதுடன் கடனை அதிகரிக்கும் மற்றும் முறையான நிதி சேர்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தடுக்கும்.

மேலும், சிறிய அளவிலான விவசாயக் கடன்களுக்கு கடன் பெறும் திறனை ஆவணமாக மதிப்பீடு செய்யும் முறையானது கிராமப்புறச் சூழலில் செயல்படுத்த முடியாததாக இருக்க வாய்ப்புள்ளது. இது கடன் வழங்கும் நடைமுறையில் தடைகளை உருவாக்கலாம். இந்த வரைவு நெறிமுறைகள் கடன்களை தவறான வகைப்படுத்தலுக்கு வழிசெய்வதுடன், தணிக்கை தடைகளுக்கும் காரணமாக அமைந்து அதன் காரணமாக வங்கி மற்றும் கடனாளி இருதரப்பினருக்கும் பொறுப்பு அதிகரிக்கக் கூடும். எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு, நகைக்கடனுக்காக முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய இந்திய ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன்.

நடைமுறையில் உள்ள கிராமப்புற கடன் வழங்குதலை அங்கீகரிக்கும் விதமாக, ரூ.2 லட்சம் வரையிலான விவசாய மற்றும் விவசாயம் தொடர்புடைய கடன்களுக்கு தங்கத்தை பிணையமாக தொடர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். கடன் கோருபவர்களின் நிதி அணுகலைப் பாதுகாக்கும் அதேவேளையில் கடன் பெறும் அளவினை மதிப்பிட ஒரு சமநிலையான ஒழுங்குமுறை மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். எனவே, விவசாய சமூகத்துக்கும் கிராமப்புற பொருளாதாரத்துக்கும் அத்தியாவசியமான இந்த விவகாரத்தில் தாங்கள் கவனம் செலுத்தி தீர்வுகாண வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x