Last Updated : 29 May, 2025 07:08 PM

9  

Published : 29 May 2025 07:08 PM
Last Updated : 29 May 2025 07:08 PM

ஆசிரியர்களை தரக்குறைவாக பேசிய திருவள்ளூர் ஆட்சியர் மீது நடவடிக்கை தேவை: ஆசிரியர் கழகம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் | கோப்புப்படம்

சென்னை: ஆசிரியர்களை தரக்குறைவாகப் பேசிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பொ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், “சமீபகாலமாக பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் மாவட்ட ஆட்சியரின் தலையீடுகளும், ஆசிரியர்களை தரக்குறைவாக ஒருமையில் பேசுவதும், குற்றவாளிகளைப் போல பொது வெளியில் திட்டும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளின் சூழல்களை மதிப்பிடாமல் 100 சதவீத தேர்ச்சியை மட்டும் பார்க்கக்கூடாது. ஒரு மாவட்டம் 100 சதவீத தேர்ச்சி பெற்றுவிட்டால் அதன் ஆட்சியருக்கு பாராட்டும், தேர்ச்சி குறைந்தால் ஆசிரியர்கள் மட்டுமே காரணம் என்பதும் சரியானதல்ல.

மேல்நிலைப் பள்ளிகளில் 2 செய்முறைத் தேர்வுகள், 2 பொதுத் தேர்வுகள், நீட், ஜேஇஇ உட்பட உயர் கல்விக்கான தேர்வுகள் என மாணவர்களுக்கும் அதிக பாடங்கள் உள்ளன. மேல்நிலைக் கல்விச்சூழல், எமிஸ் உட்பட கற்றல் சாரா பணிகள், நலத்திட்டங்களுக்கும் தனி அலுவலர்கள் இன்றி அனைத்தையும் ஆசிரியர்கள் பார்க்கும் சூழல் இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் 100% தேர்ச்சியை நோக்கில் கொண்டு ஆசிரியர்களை குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கது.

இதற்கிடையே திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆசிரியர்களை எதிர்கால சமுதாயத்தை அழிப்பதாகவும், பணிக்கு தகுதி இல்லை என்றும் ஒருமையில் திட்டியதும் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்ச்சியை அதிகரிப்பதற்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்கி சீர்படுத்த வேண்டும். அதைவிடுத்து மாவட்ட ஆட்சியர் மீடியாவை வரவழைத்து ஆசிரியர்களை திட்டுவது அரசுப் பள்ளியை பொதுவில் குறைவாக காட்டுவதற்கு ஒப்பீடாகும்.

மாவட்டத்தில் பல்வேறு பணிகளும் செயல்திட்டங்களும் 100 சதவீத நடைபெறுகிறதா என ஆய்வு செய்து அதில் குறை ஏற்பட்டால் அதற்கு தலைவராக இருக்கும் ஆட்சியர் பொறுப்பேற்பாரா? அனைத்து பணிகளிலும் இருக்கும் குறைகளை தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தி அடுத்த கட்டத்துக்கு மேம்படுத்த வேண்டும். அதைவிடுத்து குற்றவாளியாக்கி பொதுவெளியில் கேவலமாக சித்தரிப்பதுதான் எதிர்கால சமுதாயத்தை அழிப்பதாகும். இத்தகைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x