Published : 29 May 2025 06:16 PM
Last Updated : 29 May 2025 06:16 PM

‘அடுத்த 7 மாதங்கள் முழுவீச்சில் களப்பணி’ - கட்சியினருக்கு செந்தில்பாலாஜி உத்தரவு

திருப்பூரில் நடந்த தேர்தல் ஆயத்தக் கூட்டத்தில் கட்சியினர் மத்தியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.

திருப்பூர்: “அடுத்த 7 மாதங்களில் கட்சியினர் முழுமையாக களப்பணியாற்றியிருக்க வேண்டும்,” என திருப்பூரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் ஆயத்த கூட்டத்தில் செந்தில்பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3-ல் திமுகவும், 5-ல் அதிமுகவும் கடந்த தேர்தலில் வெற்றிபெற்றன. இந்நிலையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மேற்கு மண்டல சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து திருப்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் மத்திய மாவட்ட நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திருப்பூரில் இன்று (மே 29) பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டார்.

இதில் திருப்பூர் வடக்கு தொகுதி மற்றும் அவிநாசி தொகுதிகளில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், வெற்றி பெறுவதற்கு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும், வாக்காளர்களை பூத் கமிட்டி ஏஜென்ட்டுகள் எவ்வாறு அணுக வேண்டும். அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்களை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: குறிப்பாக வரும் டிசம்பர் மாதத்துக்குள் திருப்பூர் வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிகளிலும் முழுமையாக ஆய்வு செய்து, எந்தெந்த வாக்குச்சாவடிகளில் கடந்த தேர்தலில் நம் வாக்குகள் சரிந்துள்ளன? அவற்றை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பது தொடர்பாக தொடர்ந்து கட்சியினர் களப்பணியாற்ற வேண்டும்.

அதேபோல் திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் பகுதியில் வாக்கு வங்கியை உயர்த்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதிமுக, பாஜக எந்தெந்த வாக்குச் சாவடிகளில் அதிக வாக்குகளை பெற்றுள்ளன? அங்கு நம்மால் ஏன் பெறமுடியவில்லை என்பது தொடர்பான தரவுகளை கையில் வைத்து கட்சியினர் பணியாற்ற வேண்டும். இன்னும் 7 மாதங்களுக்குள் பலவீனமான அனைத்து பகுதிகளிலும் களப்பணியை கட்சியினர் ஆற்றியிருக்க வேண்டும்.

அதேபோல் பூத் வாரியாக பொறுப்பாளர்கள் நியமித்து மைக்ரோ லெவலில் கட்சியினர் களப்பணியாற்ற வேண்டும். பலவீனமான பகுதிகளில், அரசின் நலத்திட்டங்கள் மக்களை எந்தளவுக்கு சென்றடைந்துள்ளது என்பதையும் சரிபார்க்க வேண்டும்.” என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x