Published : 29 May 2025 04:54 PM
Last Updated : 29 May 2025 04:54 PM

‘தாய் மீது பாட்டில் வீச்சு’ முதல் ‘தைலாபுர அடியாட்கள்’ வரை: அன்புமணி குறித்து ராமதாஸ் மனம் திறப்பு

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்.

விழுப்புரம்: “தாயார் மீது பாட்டிலை வீசினார், காடுவெட்டி குருவை கீழ்த்தரமாக நடத்தினார், தைலாபுரத்தில் 6 அடியாட்களை வைத்துள்ளார்...” என அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய பாமக நிறுவனர் ராமதாஸ், “அன்புமணியும், சவுமியாவும் எனது கால்களை பிடித்துக் கொண்டு அழுதனர். பாஜகவுடன் கூட்டணி என்பதை ஏற்காவிட்டால், நீங்கள் தான் எனக்கு கொள்ளி வைக்கணும் என அன்புமணி கூறினார்” என்றார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் இன்று (மே 29) செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறியது: “நான் என்ன தவறு செய்தேன்? ஏன் என்னை பதவி இறக்கம் செய்தார் என தருமபுரியில் அன்புமணி பேசியது முழுக்க முழுக்க மக்களையும், கட்சி தொண்டர்களையும் திசை திருப்பும் செயல். தான் செய்த தவறுகளை மறைத்து, மக்களின் அனுதாபத்தை பெற முயற்சித்துள்ளார் என்பதுதான் உண்மை. இதற்கான பதிலையும், விளக்கத்தையும் அளிக்க வேண்டியது எனது கடமை.

இனிப்பான செய்தியை சொல்லி வந்த நான், கசப்பான பதிலை கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தவறு செய்தவர் அன்புமணி அல்ல, வன்னியர்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தையும் மீறி, எனக்கு விருப்பம் இல்லை என்றாலும், எனது குடும்பத்தினரின் நெருக்கடியால் 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி, நான்தான் தவறு செய்துவிட்டேன். ஒரு நாள் இரவு தூங்காமல், சுகாதாரத் துறையை பெற்று கொடுத்தேன்.

தவறான ஆட்டத்தைத் தொடங்கி, அடித்து ஆடினார் அன்புமணி. மேடை மற்றும் சபை நாகரிகத்தை கடைபிடிக்காமல், புதுச்சேரி பொதுக்குழுக் கூட்டத்தில் எடுத்தேன், கவிழ்த்தேன் என பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொண்டார். கட்சியில் அவருக்கும், வீட்டில் எனக்கும் உதவியாக இருப்பார் என்ற அடிப்படையில், முகுந்தனை நியமனம் செய்தேன். கால்களை ஆட்டிக் கொண்டு, என் தலையில் மைக்கை வீசாத குறையாக, மேஜையில் வீசினார்.

பனையூர் அலுவலகம் வாருங்கள் என தொலைபேசி எண்ணை கொடுத்தார். நான்கு சுவரில் பேசி முடிக்க வேண்டியதை, நடுவீதிக்கு கொண்டு வந்துவிட்டார். ஆளுயர கண்ணாடியான கட்சியை ஒரு நொடியில் உடைத்துவிட்டார். இது சரியா?

அன்புமணிக்கு பக்குவம் இல்லை என பலரும் வருந்தினர். 45 ஆண்டுகளாக கட்டுப்பாடுடன் நான் நடத்தி வந்த கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டார். வளர்த்த கடாவே மார்பில் இடித்ததால், நிலை குலைந்து போய்விட்டேன். இதையும், வெற்றியுடன் கடந்து செல்வேன். கட்சி வளர்ச்சிக்கு எதிராக பல தவறுகளை அன்புமணி செய்துள்ளார்.

தாயார் மீது பாட்டில் வீசியர்: பாமக இளைஞர் சங்க தலைவராக தமிழ்குமரனை நியமித்த அடுத்த விநாடியே ராஜினாமா செய்ய சொன்னவர் அன்புமணி. நான் கேட்டுக் கொண்டதால், 2 மாதம் காத்திருந்தார். பொதுக்குழுவுக்கு குடும்பத்துடன் வந்த தமிழ்குமரனை, கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என என்னிடம் கூறினார் அன்புமணி. பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதேபோல்தான் முகுந்தன் நியமனத்திலும் நடந்து கொண்டார்.

பொங்கல் பண்டிகைக்கு தைலாபுரத்துக்கு வந்த அன்புமணியிடம், உனது 2-வது மகளுக்கு பதவி கொடுத்திருந்தால் ஏற்றுகொள்வாய் அல்லவா? என அவரது தாயார் கேட்ட மறுகணமே, அவர் மீது பாட்டிலை வீசினார். நல்ல வேளை, சுவரின் மீது பாட்டில் விழுந்தது.

கட்சியில் 19 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரது கருத்தைக் கூட கேட்க அன்புமணி விரும்பவில்லை. அன்புமணியிடம் தலைமை பண்பு என்பது கொஞ்சம் கூட இல்லை. இதனை அவரிடம் நேரடியாகவே சொல்லி விட்டேன். தருமபுரி, சேலம் சென்ற எனக்கே, நிர்வாகிகளிடம் பேசுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்தவர் அன்புமணி.

யாருடைய உழைப்பால் கட்சி உருவானது. சோறு, தண்ணீர் இல்லாமல் பேருந்தில் நின்றுக் கொண்டு 95 ஆயிரம் கிராமங்களுக்கு சென்ற கால்கள். யார், யாருக்கு கட்டுப்பாடு விதிப்பது? காடுவெட்டி குருவை கீழ்த்தரமாக நடத்தியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

வாய் கூசாமல் பொய் சொல்வார்: பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றுவிட்டு, டெல்லியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டேன். அப்போது அன்புமணி, இனி கட்சியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். விமானத்தில் 2 சொட்டு கண்ணீர் சிந்திவிட்டு, தைலாபுரத்துக்கு திரும்பினேன்.

பசுமை தாயகம் உட்பட 34 அமைப்புகளை உருவாக்கிய எனக்கு, 14 பஞ்சாயத்து வைத்தார்கள். இதில் நான் கட்சியை பார்த்துக் கொள்கிறேன், மக்களை அன்புமணி பார்த்துக் கொள்ளட்டும் என முடிவானது. இதனை அவர் ஏற்று கொள்ளவில்லை. வாய் கூசாமல் பொய் பேசுவார். தன்னை கட்சியில் இருந்து நீக்குவதற்காக 108 மாவட்ட நிர்வாகிகளை அழைத்துள்ளார் என அனைவரிடமும் தொடர்பு கொண்டு பேசி உள்ளார் அன்புமணி. இதனால் 8 மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.

கற்பனையில் கூட சொல்ல முடியாது. தைலாபுரத்தில் 6 அடியாட்களை வைத்துள்ளார். உங்களை அடிப்பார்கள் என சமூக ஊடக அமைப்பினரிடம் கூறி உள்ளார். இருந்தும், ஒருவர் மட்டுமே வரவில்லை.

அன்புமணிக்கு பட்டாபிஷேகம்: நான் மகாபலிபுரத்தில் ஓய்வுக்காக தங்கியிருந்தபோது, என்னை சந்திக்க வந்த எனது மருமகள் சவுமியா, ‘நாள், நேரம், இடம்’ பார்த்துவிட்டோம், தலைவராக நியமிக்க வேண்டும் மாமா என்றார். 8 நாளில் தலைவரை மாற்ற வேண்டும் என கட்டாயப்படுத்தினார். இது தொடர்பாக ஜி.கே.மணியிடம் பேசினேன். ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்ட அவரது குடும்பத்தினர், ஒன்றரை மாதத்துக்கு நேரம் சரியில்லை, அதன்பிறகு ராஜினாமா செய்யுங்கள் என வலியுறுத்தியாக கூறினார்.

பின்னர், ஒன்றரை மாதத்துக்கு பிறகு பட்டாபிஷேகம் செய்துவைத்து, கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் வடித்தேன். தற்போது செயல் தலைவராக நியமித்ததும், அவர் என்ன சொல்லி இருக்க வேண்டும். செயல் தலைவராக செயல்படுகிறேன், இல்லை என்றாலும் ஒரு தொண்டனாக செயல்படுவேன் என சொல்லி இருந்தால் தீர்வு ஏற்பட்டிருக்கும்.

அனைத்திலும் சவுமியா: 2024-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தினேன். அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைப்பது என்பது இயற்கையான கூட்டணியாகும். அதன்படி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் பேசினார். அதேநேரத்தில் அன்புமணியும், சவுமியாவும் எனது கால்களை பிடித்துக் கொண்டு அழுதனர்.

மேலும், பாஜகவுடன் கூட்டணி என்பதை ஏற்காவிட்டால், நீங்கள் தான் எனக்கு கொள்ளி வைக்கணும் என அன்புமணி கூறினார். என்னால் எதுவும் பேச முடியவில்லை. இதற்கிடையில் மறுநாள் காலை, பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை வந்துவிட்டார். எனக்கு தெரியாமல் பெரிய விருந்து வைக்கப்பட்டது. பாஜகவுடனான கூட்டணி ஏற்பாடுகளை சவுமியா முன்கூட்டியே செய்துவிட்டார். அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், பாமக 3-ல் வெற்றி பெற்றிருக்கும். சின்னமும் கிடைத்திருக்கும்.

அப்படியே செய்துவிடலாம் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றால், பொதுக்குழு கூடிதான் முடிவெடுக்க முடியும் என அன்புமணி கூறியுள்ளதாக கேட்கிறீர்கள். 3 ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட வேண்டும். கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, அப்படியே செய்துவிடலாம். கட்சியின் மாநில பொதுக்குழு, செயற்குழு, அரசியல் தலைமைக் குழு ஆகிய கூட்டங்களுக்கு நிறுவனரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இந்த கூட்டத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட நாங்களே கேட்கக் கூடாதா? ஏன் எனக்கே வேண்டும் என கேட்கக்கூடாது” என்றார் ராமதாஸ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x