Published : 29 May 2025 05:56 PM
Last Updated : 29 May 2025 05:56 PM
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
பொள்ளாச்சியில் கல்லுாரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், தங்களை தொடர்புபடுத்தி அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதிக்க கோரி முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது மகன் பிரவீன் ஜெயராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த மனுவில், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தங்களை தொடர்பு படுத்தி நக்கீரன், அறன் செய், ஜீவா டுடே, ஜாம்பவான் உள்ளிட்ட 8 யூடியூப் சேனல்கள் அவதூறு கருத்துக்களை வெளியிட்டுள்ளன. அந்த வீடியோக்களை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தங்களை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட தடை விதிக்க வேண்டும்,” என்றும் மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT