Published : 29 May 2025 06:04 AM
Last Updated : 29 May 2025 06:04 AM
சென்னை: ‘‘தமிழக மீனவர்களின் இன்னல்கள் எல்லாம் தீர கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, திருவொற்றியூரில், மீன்வளத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.272.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவொற்றியூர் புதிய சூரை மீன்பிடி துறைமுகம் உட்பட ரூ. 426 .13 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை என 13 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் மற்றும் ரோச்மா நகர் மீனவ கிராமங்களில் ரூ. 170 கோடி மதிப்பில் மீன் இறங்குதளங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதுதவிர, தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்தின் மூலம் மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் அலைகள் திட்டத்தை தொடங்கி வைத்து, 2,290 மீனவ பயனாளிகளுக்கு ரூ.10 .67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
சென்னையின் வளர்ச்சியில் பழவேற்காட்டிலிருந்து கோவளம் வரைக்கும் மீனவ கிராமங்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. மீனவர்களின் நலன், வாழ்வாதாரத்தை பாதுகாப்பது தமிழ்ச்சமுதாயத்தின் பண்பாட்டை காப்பதற்கு சமம். அதை திமுக அரசு செய்து வருகிறது.
மீனவர்கள் நலன் காப்பதுடன், பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலை நாட்ட தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அதனால்தான், ஏப்-2-ம் தேதி கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற தனித்தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். கச்சத்தீவை மீட்பதுதான் தமிழக மீனவர்களின் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும்.
கடந்த 4 ஆண்டுகளில் 97 நிகழ்வுகளில், 185 படகுகளும், 1,383 மீனவர்களும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் பிரதமர், மத்திய வெளியுறவு அமைச்சருக்கும் இதுவரை 76 கடிதங்களை எழுதியுள்ளேன்.நேரில் சந்திக்கும் போதும் வலியுறுத்தி வருகிறேன்.
திமுக உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புகின்றனர். இதனால் தான், 1,354 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 29 பேரயும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த நிலையிலும், 2018-ஆம் ஆண்டு முதல் சிறைபிடித்த 229 படகுகளை இலங்கை அரசு இதுவரைக்கும் விடுவிக்கவில்லை.
ஒருபுறம், அவற்றை மீட்க அரசியல் போராட்டம் நடத்தினாலும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது எவ மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 129 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் , 26 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதமும் வழங்கியுள்ளோம். இந்த தொகையை தற்போது ரூ.8 லட்சமாக உயர்த்தியுள்ளேன்.
இப்படி, மீனவர்கள் கண்ணீரைத் துடைக்கும் அரசாக திமுக அரசு உள்ளது. இந்த இன்னல்கள் எல்லாம் தீர கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி. கடந்த 4 ஆண்டுகளில் மீன்பிடித் தடைக்கால நிவாரண உதவித்தொகை ரூ.518.53 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்காக கட்டப்பட்ட 8 ,561 வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
1.20 லட்சம் மீனவர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.1,528 கோடிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. தங்கச்சிமடம், குந்துகால், பாம்பன் ஆகிய இடங்களில் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.356.50 கோடி நிதி ஒதுக்கி, பணிகள் தொடங்கப்பட உள்ளது.
மீனவர்கள் துயரங்களை எதிர்கொள்ளும் தருணங்களில் நிவாரண உதவிகளை வழங்குவதில் முனைப்போடு திமுக அரசு செயல்பட்டு வருகிறது. மீனவர்களின் நலனுக்காக தமிழகம் அளவுக்கு எந்த மாநிலமும் இதுவரை இப்படிப்பட்ட காரியங்களை செய்ததில்லை. மீனவர்களின் நலனுக்காக இன்னும் செய்ய நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். அரசின் திட்டங்களை மீனவ மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு மற்றும் கலாநிதி வீராசாமி எம்பி., கே.பி.சங்கர்,எஸ்.சுதர்சனம், ஆர்.டி.சேகர், தாயகம் கவி, துரை சந்திரசேகர் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT