Published : 29 May 2025 09:36 AM
Last Updated : 29 May 2025 09:36 AM
நடிகர் விஜய்யுடன் யாரெல்லாம் கூட்டணி சேரப் போகிறார்கள்... அல்லது அவர் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்பதே புரியாத புதிராக இருக்கையில், அவரை மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடச் சொல்லி அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பிரமாதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள். இருந்தாலும் இதில் மதுரை மேற்கு மட்டும் ஸ்பெஷல். காரணம், இது எம்ஜிஆர் போட்டியிட்டு வென்ற தொகுதி. எம்ஜிஆர் வென்ற பழைய மேற்கு தொகுதிக்கான எல்லைகள் இப்போது மாற்றி அமைக்கப்பட்டுவிட்ட போதும், இன்னமும் இது அதிமுக-வுக்கு சாதகமான தொகுதியாகவே பார்க்கப்படுகிறது. இதுவரை இந்தத் தொகுதியில் 6 முறை அதிமுக வென்றுள்ளது. 2011 தொடங்கி இப்போது வரைக்கும் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இந்தத் தொகுதியின் எம்எல்ஏ-வாக இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு. இம்முறை இந்தத் தொகுதியை ராஜூவிடம் இருந்து கைப்பற்ற அமைச்சர் மூர்த்திக்கு ஸ்பெஷல் அசைன்மென்ட் கொடுத்திருக்கிறது திமுக தலைமை.
இந்த நிலையில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மதுரையிலிருந்து நடிகர் விஜய் சட்டமன்றத்துக்குப் போகவேண்டும் என அவரது ரசிகர்கள் இப்போதே அவருக்காக இடம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதுவும் எம்ஜிஆருக்கு வெற்றி தந்த மதுரை மேற்கில் விஜய் போட்டியிட வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் உள்ள ஏதாவதொரு தொகுதியில் விஜய் களமிறங்கலாம் எனச் சொல்லப்படும் நிலையில், அவரை மதுரைக்கு இழுக்கும் அவரது ரசிகர்கள், ‘விஜய்யை மதுரை மேற்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்து தமிழக முதல்வராக்கிய வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி’ என போஸ்டரடித்து புரட்சி செய்திருக்கிறார்கள்.
இந்தப் போஸ்டரை ஒட்டிய மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தவெக இளைஞரணி (மேற்கு) அமைப்பாளரான ‘கில்லி’ சிவாவிடம் பேசினோம். “எங்கள் தலைவர் தமிழகத்தில் எந்தத் தொகுதியில் நின்றாலும் அமோக வெற்றி பெறுவது உறுதி. ஆனால், அவர் மதுரையில் போட்டியிட வேண்டும் என்பது எங்களது ஆசை. அதைத்தான் போஸ்டர் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறோம். இந்தத் தொகுதியில் எம்ஜிஆர் எப்படி அமோக வெற்றிபெற்றாரோ அதே போல் தளபதி விஜய்யும் தமிழக அரசியலில் உச்சம் தொடுவார்” என்று சொன்னார் அவர்.
மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் தங்கபாண்டியனோ, “எல்லா மாவட்டச் செயலாளர்களுமே தங்களது மாவட்டத்தில் தலைவர் போட்டியிட வேண்டும் என, விரும்புகிறோம். தொண்டர்களும் இதையே தான் நினைக்கிறார்கள். மதுரை மேற்கு எம்ஜிஆரை அரசியலில் உச்சத்திற்கு கொண்டு சென்ற ராசியான தொகுதி. அதை மனதில் வைத்து மதுரை மேற்கில் தலைவர் நிற்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள். மதுரை மேற்கில் அல்ல... மதுரைக்குள் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவரை கில்லி கணக்காய் ஜெயிக்க வைக்க நாங்கள் தயாராய் இருக்கிறோம்” என்றார்.
மதுரை மேற்கை அதிமுக-விடம் இருந்து கைப்பற்ற இப்போதே வியூகம் வகுத்து செயலாற்ற ஆரம்பித்திருக்கிறது ஆளும் கட்சியான திமுக. இந்தச் சூழலில் எம்ஜிஆர் சென்டிமென்ட்டைத் தூக்கிக் கொண்டு விஜய்யும் மதுரை மேற்கை நோக்கிப் புறப்பட்டால் களம் ரணகளம் தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT