Published : 29 May 2025 09:37 AM
Last Updated : 29 May 2025 09:37 AM
“50 தொகுதிகளில் படுத்துக் கொண்டே வெற்றி பெறும் வித்தையை தெரிந்து வைத்துள்ள மருத்துவர் அய்யா, மகனையும் கட்சியையும் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் வித்தையை படிக்க மறந்துவிட்டாரே” - பாமக-வில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் அதிகார யுத்தத்தை அரசியல் வட்டாரத்தில் இப்படித்தான் பேசுகிறார்கள்.
பாமக பொதுக்குழுவில், தனது மகள் வழி பேரனை பாமக இளைஞர் சங்க தலைவராக ராமதாஸ் அறிவித்ததில் வெளிப்படையாக வெடித்த அப்பா - பிள்ளைக்கான அதிகார யுத்தம் இருக்க இருக்க உக்ரமாகிக் கொண்டே தான் போகிறது. இந்த நிலையில், தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் காட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளை அழைத்து ராமதாஸ் நடத்திய ஐந்து ஆலோசனைக் கூட்டங்களும் பிசுபிசுத்துப் போய்விட்டன. கட்சிக்குள் இனி அன்புமணி தான் எல்லாமே என தெளிவாக தெரிந்து போனதால் பெருவாரியான நிர்வாகிகள் தோட்டத்து ஆலோசனைக் கூட்டங்களை தைரியமாகப் புறக்கணித்து விட்டனர். இதில் 3 எம்எல்ஏ-க்களும் உள்ளடக்கம்.
தனது ஆலோசனை கூட்டத்துக்கு வராமல் புறக்கணிப்பவர்களை தயவு பார்க்காமல் பொறுப்பிலிருந்து நீக்கும் முடிவில் தான் ராமதாஸ் முதலில் இருந்தாராம். ஆனால், சுமார் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் புறக்கணித்ததால், கட்சி நலன் கருதி யாரையும் கைவைக்க முடியாமல் பொறுமை காக்கிறாராம் மருத்துவர். அதேசமயம், வெளிப்படையாகப் பார்த்தால் இது அதிகாரப் போட்டியாக தெரிந்தாலும் உள்ளுக்குள் வேறு பல கணக்குகளும் ஓடிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இது தொடர்பாக பாமக வட்டாரத்தில் நம்மிடம் பேசியவர்கள், “கட்சிக்கான வரவு செலவுகள், அறக்கட்டளை சொத்து உள்ளிட்ட அனைத்தையும் இப்போது மருத்துவர் அய்யா தான் கவனித்து வருகிறார். பாமக தலைவராக ஜி.கே.மணி இருந்த வரை இதில் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. பாமக தலைவராக அன்புமணியை அறிவித்த பிறகு தான் சிக்கல் ஆரம்பமானது. முன்பு, ஒன்மேன் ஆர்மியாக அனைத்து முடிவுகளையும் தானே எடுத்து வந்த அய்யாவுக்கு, மகன் தலைவராக வந்த பிறகு அப்படி சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.
அய்யா எந்த முடிவை எடுத்தாலும் ஏன், எதற்கு என்ற கேள்வி அன்புமணி தரப்பிலிருந்து வந்து விழுந்தது. இது பல நேரங்களில் அய்யாவுக்கு பெருத்த சங்கடங்களை உண்டாக்கியது. இதனிடையே, மருமகள் சவுமியா அன்புமணியும் கட்சி நடவடிக்கைகளில் தலையிட ஆரம்பித்தார். இதை அய்யா சுத்தமாக விரும்பவில்லை. சவுமியா சொல்லித்தான் அன்புமணி, பல விஷயங்களிலும் கேள்விகளை எழுப்புகிறார் என்பது அய்யாவின் புரிதல்.
இந்த நிலையில் தான் அய்யாவின் விருப்பத்துக்கு மாறாக 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி அமைத்தார் அன்புமணி. இதன் பின்னணியில், தானோ, சவுமியாவோ மத்திய அமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற திட்டம் அன்புமணிக்கு பிரதானமாக இருந்தது. ஆனால், எதிர்பார்த்தது எதுவும் நடக்காது போனதால், ‘இனியாவது நான் சொல்வதைக் கேளுங்கள்’ என்று சொல்லிப்பார்த்தார் அய்யா. ஆனால், அவர் சொல் எடுபடவில்லை. தேர்தல் சமயத்தில் நடந்த வரவு செலவுகள் குறித்தும் ‘கணக்கு வழக்கு’ சர்ச்சை வெடித்திருக்கிறது. இதையெல்லாம் பார்த்துவிட்டுத் தான் மகள் வழி பேரன் முகுந்தனை பாமக இளைஞர் சங்க தலைவராக திடீரென அறிவித்தார் அய்யா. இதற்கு அன்புமணி பொது மேடையிலேயே எதிர்ப்புக் கொடி தூக்கினார்.
இந்த நிலையில், அதனால் மக்களவைத் தேர்தலைப் போல கூட்டணி விஷயத்தில் அன்புமணி அவசரப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, அதிமுக கூட்டணியை இறுதிசெய்ய அமித் ஷா சென்னைக்கு வந்த நாளில் அன்புமணியை பாமக செயல்தலைவராக்கி, தலைவர் பொறுப்பை தானே எடுத்துக் கொண்டார் அய்யா. இதையும் அன்புமணி துளியும் எதிர்பார்க்கவில்லை. அய்யாவின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, அன்புமணியும் தனது ஆதரவாளர்களை தக்கவைக்கும் வேலைகளில் தீவிரமாக இறங்கி, அதில் வெற்றியும் கண்டுவிட்டார்.
பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளில் பெரும்பகுதியினர் அன்புமணி பக்கமே நிற்பதால் அய்யாவால் அடுத்த கட்டத்துக்குப் போகமுடியவில்லை. இதனால் நாளுக்கு நாள் அன்புமணியின் கை ஓங்கிக் கொண்டே வருகிறது. இருவருக்கும் இடையில் ஜி.கே.மணிதான் இப்போது சமாதான தூது சென்றபடி இருக்கிறார். ஆனால், தூதராக ஜி.கே.மணி வருவதையே அன்புமணி அவ்வளவாய் விரும்பவில்லை என்கிறார்கள். கட்சிக்குள் தனது செல்வாக்கைக் காட்ட அய்யா அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால், நடப்பதை எல்லாம் பார்த்தால் அது அவரையே பூமராங் கணக்காய் தாக்கிவிடும் போலிருக்கிறது” என்றார்கள்.
இதனிடையே, மீண்டும் அன்புமணியை கட்சித் தலைவராக்குவது, இளைஞர் சங்க தலைவராக சவுமியாவை நியமிப்பது, வன்னியர் சங்க தலைவர் பொறுப்பை முகுந்தனுக்கு தருவது என ஒரு சமாதான உடன்படிக்கை தைலாபுரம் தோட்டத்தில் பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு மத்தியில், “எனக்கும் அன்புமணிக்கும் மனக்கசப்பு இல்லை. கசப்பு என்று எப்போதும் நான் கூறியதும் இல்லை; இனிப்பான செய்தியைதான் கூறி வருகிறேன்.
இது தொடர்பாக அடுத்த வியாழக்கிழமை (மே 29-ம் தேதி) பேசலாம்” என செய்தியாளர்களுக்கு சேதி சொல்லி இருக்கிறார் ராமதாஸ். அதேபோல். தருமபுரி மாவட்டம் கடத்தூரில் 24-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அன்புமணி, “அப்படி நான் என்ன தவறு செய்தேன்? ஒரு மாத காலமாக மன உளைச்சலில் இருக்கிறேன். எனக்கு தூக்கமே வரவில்லை” என குமுறி இருக்கிறார்.
தந்தையின் கோபத்துக்கும் மகனின் குமுறலுக்கும் தீர்வு கிடைக்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT