Published : 29 May 2025 06:08 AM
Last Updated : 29 May 2025 06:08 AM
மதுரை: ‘இ.டி.க்கு பயமில்லை என்றால் நண்பர்களை வெளிநாட்டுக்கு அனுப்பியது ஏன்?’ என துணை முதல்வர் உதயநிதிக்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
திமுகவுக்கு பயம்: பாஜக - அதிமுக கூட்டணியை பார்த்து திமுகவுக்கு பயம் வந்திருப்பது உண்மை. பிரதமர் மோடிக்கும் பயப்பட மாட்டேன், இ.டி.க்கும் (அமலாக்கத் துறை) பயப்படமாட்டேன் என துணை முதல்வர் உதயநிதி தொடர்ந்து பேசி வருகிறார். திமுகவினரும் அப்படியே பேசி வருகின்றனர்.
தமிழகத்தில் 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் இ.டி. சோதனையை வைத்து மிரட்டிதான் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. அப்போது உதயநிதி அரசியலுக்கு வரவில்லை.
அமலாக்கத் துறை சோதனைக்கு பயம் இல்லை என்றால் உதயநிதியின் நண்பர்கள் ஏன் லண்டனுக்கு தப்பிச் செல்ல வேண்டும்? நண்பர்களை ஏன் லண்டனுக்கு உதயநிதி அனுப்பி வைக்க வேண்டும்? இங்கேயே இருக்க வேண்டியதுதானே.
தமிழக பாஜக தலைவராக முருகன் இருந்தபோது வேல் யாத்திரை நடத்தினார், அண்ணாமலை தலைவராக இருந்தபோது என் மண், என் மக்கள் யாத்திரை நடத்தினார். என்னுடைய யாத்திரை தமிழக சட்டப்பேரவைக்கு திரளாக பாஜக எம்எல்ஏக்களை அழைத்துச் செல்வதாக இருக்கும். மக்களவைத் தேர்தலில் பாஜகவில் போட்டியிட்ட பலர் 2-வது இடத்துக்கு வந்தனர். சட்டப்பேரவைத் தேர்தலில் முதலிடம் பெறுவோம்.
முதல்வர் முதலில், நிதி ஆயோக் கூட்டத்துக்கு செல்வதாகக் கூறினார். பின்னர் அதற்காகப் போகவில்லை என பொருள்படும்படி கூறினார். பின்னர் எதன் அடிப்படையில் ஏன் டில்லி சென்றார் என்பதை முதல்வரிடம் கேட்டால் அவரே தெளிவாக சொல்வார் என நினைக்கிறேன்.
மேலும், பிரதமர் மோடியை தனியாகவும் சந்தித்துப் பேசியுள்ளார். அமலாக்கத் துறை சோதனைக்காகத்தான் பிரதமரை முதல்வர் சந்தித்தார் என்ற விமர்சனம் வந்து கொண்டிருக்கிறது. எங்கள் எண்ணமும் அதுவாகத்தான் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT