Published : 28 May 2025 02:06 PM
Last Updated : 28 May 2025 02:06 PM
சென்னை: மாநில உரிமைகளை நிலைநாட்டி, தனிச் சிறப்பான பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று மாநிலங்களவை தேர்தலுக்கு தேர்வாகியுள்ள கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: " வரும் ஜூன் 19-ம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன், திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், கவிஞர் சல்மா, சேலம் எஸ்.ஆர்.சிவலிங்கம் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தோழமை கட்சிகளின் கருத்துகளை மதித்து, அரவணைத்து செல்வது, மாநில உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் சட்டப் போராட்டத்தின் முக்கியத்துவம், கருத்தியல் தளத்தில் சமூக நீதி ஜனநாயக, மதச்சார்பற்ற, பகுத்தறிவு கருத்துகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியம்; கட்சியின் அமைப்பின் உணர்வுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருப்பது பொருத்தமானது.
மாநிலங்களவைக்கு செல்லும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன், திமுக பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் வகுப்புவாத, மதவெறி சக்திகள் முன்வைக்கும் சவால்களை எதிர்கொண்டு, அவற்றை முறியடிக்கும் போராட்டத்தில், மாநில உரிமைகளை நிலைநாட்டி, கூட்டாட்சி கோட்பாடுகளை உயர்த்தி பிடித்து, தனிச் சிறப்பான பங்களிப்பை செலுத்த வேண்டும் என்ற விழைவுடன் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது" என்று அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT