Published : 28 May 2025 11:15 AM
Last Updated : 28 May 2025 11:15 AM
சென்னை: வரும் ஜுன் மாதம் நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின், நிர்வாகக்குழு செயற்குழு கூட்டம் இன்று (மே 28) நடைபெற்றது. அதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு: 2024ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், வருகிற ஜூன் 19-ம் தேதி நடைபெற இருக்கும் 6 தமிழக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக, கமல்ஹாசனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு ஏகமனதாக முடிவு செய்து அறிவிக்கிறது.
மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான கமல்ஹாசனுக்கு தங்களது மேலான ஆதரவை நல்கும்படி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக எம்பி அன்புமணி, அதிமுக எம்பி சந்திரசேகரன், மதிமுக எம்பி வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் இருந்து 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.
இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கூடவே ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டது போல் மநீமவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT