Published : 27 May 2025 05:44 AM
Last Updated : 27 May 2025 05:44 AM
சென்னை: சைபர் செக்யூரிட்டி குறித்து ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக அதிகாரிகள் பயிற்சி மையம் மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் முதன்மை பயிற்சி நிறுவனமான சென்னை பரங்கிமலையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமி (ஒடிஏ) மற்றும் சென்னை எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இடையே நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதிகாரிகள் பயிற்சி அகாடமியின் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே. பெர்னாண்டஸ் மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சி.முத்தமிழ் செல்வன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதன்படி, அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பயிற்சிபெறும் அதிகாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சைபர் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்படும். இப்படிப்புக்கான பாடத் திட்டம் சைபர் பாதுகாப்பு, தரவு பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அடிப்படைகள் போன்ற முக்கிய பகுதிகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாறும் போர் உத்தி: இந்நிகழ்ச்சியில் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் பெர்னாண்டஸ் உரையாற்றுகையில், ‘‘இன்றைய போர்களில், வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்திருக்கும் நவீன, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பின்னிப் பிணைந்துள்ளன. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாமல் போரை இனி நினைத்துப் பார்க்க முடியாது. மேலும், கால மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ள ராணுவ பயிற்சி அதிகாரிகள் தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
எஸ்ஆர்எம் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் முத்தமிழ் செல்வன் தனது உரையில், ‘‘ராணுவ அதிகாரிகள் தங்கள் புராஜெக்ட்டுகள் மற்றும் கல்வியை தொடர எங்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகங்கள் எப்போதும் திறந்திருக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT