Published : 27 May 2025 09:14 AM
Last Updated : 27 May 2025 09:14 AM
பாமக தலைமை இடம் விழுப்புரம் மாவட்டமாக இருந்தாலும் தருமபுரி மாவட்டத்தில் தான் பாமக-வை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் வாக்காளர்கள் கணிசமாக இருக்கிறார்கள். அதனால் தான் 2014-ல் தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆனார் அன்புமணி ராமதாஸ். 2019 தேர்தலில் இங்கு மீண்டும் போட்டியிட்ட அன்புமணி, திமுக-விடம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். இருந்த போதும் 2024 தேர்தலில் தனது மனைவி சவுமியாவை இங்கு நிறுத்தினார் அன்புமணி. இம்முறை திமுக வேட்பாளருக்கு சரியான போட்டியைக் கொடுத்த சவுமியா, முதல் சுற்றுகளில் முன்னணியில் இருந்தாலும் இறுதிச் சுற்றுகளில் சுமார் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.
தருமபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த தேர்தல்களில் தோற்றாலும் பாமக கவுரமான இடத்தையே பெற்று வந்திருக்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் களம்கண்ட பாமக, தருமபுரி மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்றது. அந்தளவுக்கு இந்த மாவட்டத்தில் பாமக-வுக்கு தனித்த செல்வாக்கு இன்றைக்கும் இருக்கிறது. இதை கணக்கில் வைத்து 2026 சட்டமன்றத் தேர்தலிலும் சவுமியா அன்புமணியை இந்த மாவட்டத்தில் ஏதாவதொரு தொகுதியில் நிறுத்தி பல்ஸ் பார்க்க தயாராகி வருகிறது பாமக தலைமை.
அதற்கு முன்னோட்டமாகவே அண்மைக்காலமாக சவுமியா அன்புமணி தருமபுரி மாவட்டத்துக்குள் அடிக்கடி வந்துபோக ஆரம்பித்திருக்கிறார். அண்மையில் 2 நாட்கள் காதணி விழா, திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து சவுமியா பங்கேற்றார். மக்களவைத் தேர்தலில் நூலிழையில் தோற்றாலும் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லும் முகமாக இதற்கு முன்பும் பலமுறை தருமபுரிக்கு விசிட் அடித்திருக்கிறார் சவுமியா. கல்லூரிகளில் நடத்தப்படும் சுற்றுச் சூழல் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் தொடர்ச்சியாக அவர் பங்கேற்று வருகிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தருமபுரி மாவட்ட பாமக நிர்வாகிகள் சிலர், “தமிழகத்தில் பாமக செல்வாக்காக உள்ள மாவட்டங்களில் தருமபுரி முதலிடத்தில் உள்ளது. அதனால், மருத்துவர் ஐயாவும் அன்புமணியும் இந்த மாவட்டத்தின் மீது தனிப்பிரியம் வைத்திருக்கிறார்கள். தங்கள் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருக்கும் இந்த மாவட்ட மக்களுக்கு தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே எம்பி, எம்எல்ஏ-க்களாக இருக்க வேண்டும் என நினைக்கிறார் அன்புமணி. 2024 மக்களவைத் தேர்தலில் தருமபுரி வேட்பாளராக அரசாங்கம் என்பவரைத்தான் முதலில் அறிவித்தார் மருத்துவர் ஐயா. ஆனால், ஒரே நாளில் அவரை மாற்றிவிட்டு அண்ணியாரை (சவுமியா) வேட்பாளராக அறிவிக்க வைத்தார் அன்புமணி.
இந்தக் காலத்தில் பெண்கள் தலையில் பூ வைப்பதே அரிதாக இருக்கிறது. அப்படியே பூ வைத்தாலும் கனகாம்பர பூவை இப்போது கிராமத்துப் பெண்கள் தான் தலையில் வைக்கிறார்கள். மக்களவைத் தேர்தலின் போது, நானும் உங்களில் ஒருத்திதான் என உணர்த்துவதற்காகவே தனது தலையில் கனகாம்பர பூ சூடி வந்து வாக்குச் சேகரித்தார் அண்ணியார். தொடர்ச்சியாக எங்களை ஆதரிக்கும் உங்களுடன் நாங்களும் நெருக்கமாக இருக்கிறோம் என்று சொல்லும் விதமாகவே அண்ணியாரின் செயல்பாடுகள் இருக்கும்.
அவரது இந்த அணுகுமுறையானது இந்த மாவட்ட மக்களுக்கு பிடித்திருக்கிறது. அதனால் சட்டமன்றத் தேர்தலில் இந்த மாவட்டத்தில் ஏதாவதொரு தொகுதியில் அண்ணியார் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதேசமயம், அன்புமணிக்கு தனது இளைய மகள் சஞ்சுத்ராவை நேரடி அரசியலுக்கு கொண்டுவர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் அம்மாவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்த சஞ்சுத்ராவுக்கு தருமபுரி மக்கள் மத்தியில் நல்ல அறிமுகமும் இருக்கிறது. அவர் நேரடி அரசியலுக்கு வந்தால் பிற்காலத்தில் அவரும் இந்த மாவட்டத்தில் தான் தேர்தலில் போட்டியிடுவார்” என்கிறார்கள்.
இதுகுறித்து பாமக-வின் முன்னாள் தருமபுரி மாவட்டச் செயலாளர் மதியழகனிடம் கேட்டதற்கு, “சவுமியா அன்புமணி தருமபுரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் நின்றால் நிச்சயம் வெற்றிபெறுவார் என்பதால் பாமக நிறுவனர் மருத்துவர் ஐயா, தலைவர் அன்புமணி ஆகியோர் ஆசியுடன் அவர் நிச்சயம் போட்டியிடுவார்.
மக்களவைத் தேர்தலில் சவுமியாவுக்கு பாப்பிரெட்டிபட்டி சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட மக்கள் பெருவாரியாக வாக்களித்திருந்தார்கள். அதனால் அநேகமாக அவர் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிடுவதற்கு அதிகமான சான்ஸ் இருக்கிறது. அப்படி அவர் போட்டியிட்டால் அவரை ஜெயிக்க வைத்து சட்டமன்றத்துக்கு அனுப்பிவைக்க இங்கிருக்கும் பாமக-வினர் தயாராக இருக்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT