Published : 26 May 2025 08:06 PM
Last Updated : 26 May 2025 08:06 PM
கோவை: கோவையில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மாநகர சாலைகள் சேறும், சகதியுமாக மாறியுள்ளன. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கோவையில் நேற்று இரவு முதல் சிறிது நேரம் சாரல் மழையாகவும், சில மணி நேரம் கன மழையாகவும் பெய்கிறது. கோவையில் நகரப் பகுதிகளை விட, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், கனமழையின் தாக்கம் அதிகளவில் உள்ளது. மழையின் காரணமாக மாநகர் மற்றும் புறநகரப் பகுதிகளில் உள்ள சாலையோர தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
குறிப்பாக, மாநகராட்சியின் பல்வேறு உட்புறச் சாலைகளில் மழைநீர் வடிகால் இல்லை. பிரதான சாலைகளில் இருக்கும் மழைநீர் வடிகாலும் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால், பீளமேடு, விளாங்குறிச்சி, காந்தி மாநகர், சிங்காநல்லூர், சவுரிபாளையம், உடையாம்பாளையம், ஆவாரம் பாளையம், காந்திபுரம், கணபதி, வெள்ளலூர் என பல்வேறு இடங்களில் உள்ள பிரதான சாலைகள், இணைப்புச் சாலைகள், உட்புறச் சாலைகள் என எல்லா சாலைகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கிக் காணப்படுகிறது.
முறையாக பராமரிக்கப்படாமல் குண்டும், குழிகளாக சாலைகள் காணப்படுவதால், அதில் மழைநீர் தேங்கி சாலையே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. பீளமேடு, ஒண்டிப்புதூர், கணபதி, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, சேரன் மாநகர், வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பெரும் சதவீத மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகள் பாதாள சாக்கடைத் திட்டப் பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணி உள்ளிட்ட காரணங்களுக்காக சாலைகள் தோண்டப்படுவதாலும், பணிகள் முடிந்த பின்னர் சரிவர சீரமைக்கப்படாமல் உள்ளதாலும் அந்த சாலைகள் மழைக்கு சேறும் சகதியுமாக மாறியுள்ளன.
இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், சாலையோரம் நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். குறிப்பாக, சேறான பகுதிகளில் வாகன ஓட்டிகள் சறுக்கி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை விரைவாக முடித்து சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT