Published : 26 May 2025 07:42 PM
Last Updated : 26 May 2025 07:42 PM

கோவை முதல் குமரி வரை: தமிழகத்தில் கனமழை பாதிப்பு நிலவரம் என்ன?

கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீரோட்டம் அதிகரித்து காணப்பட்டது | படம்: எம்.பெரியசாமி

சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, கொடைக்கானல், தென்காசி, கன்னியாகுமரி உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை எச்சரிக்கை காரணமாக சுற்றுலாத் தளங்கள் மூடப்பட்டன.

கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அநேக இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக, சுற்றுலா பயணி ஒருவர் மரம் விழுந்து உயிரிழந்தார். மாவட்டத்தின் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. சூறாவளி காற்றினால் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைபட்டது. மேலும், மின் கம்பிகள் அறுந்து மின் தடை ஏற்பட்டது.

முத்தோரை பாலாடா சுற்றுவட்டாரப்‌ பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பீட்ரூட், கேரட், பூண்டு பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதுவரை ஊட்டியில் 4 வீடுகள் பகுதி சேதமடைந்துள்ளன. கூடலூரில் 300 வாழைகள் சூறாவளி காற்றினால் சாய்ந்தன. மழை தொடர்வதால் சுற்றுலா தலங்கள் திங்கள்கிழமையும் மூடப்பட்டன. 20 இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல்: இன்று காலை முதலே கொடைக்கானல் மலைப்பகுதியில் பலத்த காற்று வீசியதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டதால் ஏரி வெறிச்சோடியது. நாள் முழுவதும் விட்டு விட்டு தொடர் மழை பெய்தது. காற்றின் வேகம் குறையாததால் மாலை வரை படகு சவாரிக்கு அனுமதிக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பலத்த காற்று காரணமாக மலைக்கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து மலை பிரதேசம் முழுவதும் கடும் குளிர் நிலவியதால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது.

திருவையாறு: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில், திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு பருவம் தவறி அதிக மழை பெய்ததால் எள் செடிகளை மழைநீர் சூழ்ந்தது. 10 நாட்களாகியும் மழைநீர் வடியாமல் வயலிலேயே தேங்கியுள்ளதால், ஆயிரம் ஏக்கரில் எள் செடிகளில் வேர்கள் அறுந்து, காய்கள் பிஞ்சிலேயே பழுத்து, எள் பொக்கையாக மாறிவிட்டது. இதனால், எள்ளை அறுவடை செய்ய முடியாமல், விவசாயிகளுக்கு பெரும் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிறு இரவு போச்சம்பள்ளி, பாரூர், ஊத்தங்கரை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், பாரூர் அருகே உள்ள வெற்றிலைக்காரனூர் கிராமத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், விவசாயி ராஜா என்பவரது தென்னந்தோப்பில் இடி, மின்னலின் போது 5 தென்னை மரங்கள் எரிந்து சேதமானது. இதே போல், கிருஷ்ணகிரி அருகே சின்னபனமூட்லு பகுதிகளில் காற்றின் வேகத்திற்கு தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், விவசாயி மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான பசுமாடு காயம் அடைந்தது.

கோவை: கோவையில் கடந்த இரு நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக மாநகர சாலைகள் சேறும், சகதியுமாக மாறின. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழிகளாக காணப்படுவதால், அதில் மழைநீர் தேங்கி சாலை தெரியாத அளவுக்கு காணப்பட்டது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். வாகன ஓட்டிகள் சறுக்கி கீழே விழுந்து காயமடைந்தனர்.

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2 நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர்.

தென்காசி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தென்காசி மலைப் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு முதல் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இரவு முதல் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் நேற்றும் அருவிகளில் குளிக்க தடை நீடிக்கப்பட்டது. அருவிகளில் குளிக்க முடியாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில், ஞாயிறு இரவில் தொடங்கி விடிய விடிய பெய்த மழை, திங்கள்கிழமை பகலிலும் பரவலாக நீடித்தது. தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் ரப்பர் பால் வெட்டும் பணி முடங்கியது. தேங்காய் வெட்டும் தொழில், மீன்பிடி தொழில், கட்டிட தொழில் என, பல தொழில்கள் பாதிக்கப்பட்டன. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் நகர, கிராம பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர்.

கனமழை எச்சரிக்கை: நாளை மே 27-ம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மே 28-ம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x