Published : 26 May 2025 04:27 PM
Last Updated : 26 May 2025 04:27 PM
சென்னை: “கருணாநிதி விரும்பிய திட்டத்தை ஸ்டாலின் எதிர்ப்பது இப்போது விசித்திரமாக இருக்கிறது. நான் தமிழகத்தை விட்டு வெளியேறிவிட்டேன். ஆனால், தமிழகம் என்னை ஒருபோதும் விட்டுவிடாது” என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார்.
சென்னை திருவான்மியூரில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக பாஜக இன்று நடத்திய கருத்தரங்கில் உரையாற்றிய ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், "நான் தமிழகத்தில்தான் வளர்ந்தேன். நான் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம், ஆனால் தமிழகம் என்னை ஒருபோதும் விட்டுவிடவில்லை. தமிழகம் என் மீது ஏற்படுத்திய தாக்கம் மிக ஆழமானது. தமிழ்நாடு திருவள்ளுவர், சித்தர்கள், முருகன், மகாகவி சுப்பிரமணிய பாரதியார், ஆயிரக்கணக்கான கோயில்களின் பூமி. இது எம்ஜிஆர் வாழ்ந்த பூமி, ஜல்லிக்கட்டு பூமி. தமிழ்நாட்டின் அனுபவம் என்னை வழிநடத்தி வருகிறது.
இன்றைய கருத்தரங்கு ஒரே நாடு, ஒரு தேர்தல் பற்றியது. இந்த ஒரே நாடு, ஒரு தேர்தல் குறித்து பல பொய்யான மற்றும் போலி செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில், அவர்கள் வெற்றி பெற்றால், மின்னணு வாக்குப் பதிவு சூப்பர். ஆனால், அவர்கள் தோற்றால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தவறு என்று கூறுகிறார்கள்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அவர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தலை விரும்பிய கருணாநிதி அதை வலியுறுத்தினார். இன்று, சோகமான விஷயம் என்னவென்றால், திமுகவினர் அதை எதிர்க்கிறார்கள். சுதந்திரம் பெற்ற கடினமான ஆரம்ப காலங்களில் 20 ஆண்டுகள் நமது நாடு ஒரே நேரத்தில்தான் தேர்தலை நடத்தியது. இன்று அதை எதிர்ப்பவர்கள், ‘நெஞ்சுக்கு நீதி’யில் ஒரே நாடு, ஒரு தேர்தலை ஆதரிப்பது குறித்து கருணாநிதி எழுதியதைப் படிக்க வேண்டும்.
ஒரே நாடு, ஒரு தேர்தலை ஆராய ஒரு குழுவை அமைக்குமாறு கருணாநிதி அப்போது மத்திய அரசை வலியுறுத்தினார். கருணாநிதி விரும்பிய திட்டத்தை ஸ்டாலின் எதிர்ப்பது இப்போது விசித்திரமாக இருக்கிறது” என்று பவன் கல்யாண் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT