Published : 26 May 2025 12:19 AM
Last Updated : 26 May 2025 12:19 AM

நீலகிரி, கோவையில் இன்றும் அதிகனமழை வாய்ப்பு: 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

தமிழகம் மற்றும் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று அதிகனமழையும், தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் கரையைக் கடந்து, வட கர்நாடகத்தின் உள்பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. பிறகு கிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்ககூடும். மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும்27-ம் தேதி உருவாகக்கூடும்.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும், நாளையும் தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 28 முதல் 31-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 27-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 28-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், 29-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 29-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 21 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 14 செ.மீ., வால்பாறையில் 10 செ.மீ., சின்கோனா, நீலகிரி மாவட்டம் எமரால்டு, பந்தலூர், விண்ட் வொர்த் எஸ்டேட், தேவாலா ஆகிய இடங்களில் தலா 9 செமீ, நீலகிரி மாவட்டம் மேல் பவானி, கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரம், சோலையாறு, நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை, மேல் கூடலூர், கீழ்கோத்தகிரி எஸ்டேட் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x