Published : 25 May 2025 09:00 AM
Last Updated : 25 May 2025 09:00 AM
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் தொடர்ந்து இராண்டாவது முறை எம்பி-யாக இருப்பவர் கே.நவாஸ்கனி. இவர் அண்மையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சியின் தேசிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணல் இது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்த குறுகிய காலத்திலேயே அக்கட்சியின் தேசியச் செயலாளர் பதவி பெற்றுவிட்டீர்களே? கட்சியில் தகுதியான சீனியர்கள் யாரும் இல்லை என்பதுதான் காரணமா?
இந்திய இஸ்லாமியர்களின் அரசியலின் தாய்சபையாக ஐயூஎம்எல் உள்ளது. 2011-ல் கட்சியில் இணைந்த நான் அதே ஆண்டில் மாநில கவுரவ ஆலோசகரானேன். எனது சிறப்பான செயல்பாட்டில் நம்பிக்கை வைத்து 2019-ல் மக்களவைக்கு போட்டியிட வாய்ப்பளித்தார்கள். இதில் சிறந்து விளங்கியதால் கட்சியின் மாநில துணை தலைவரானேன். இதிலும் சிறப்பாக பணியாற்றியதால் மீண்டும் 2024-ல் எம்பி ஆகும் வாய்ப்புக் கிட்டியது. அனைத்து பொறுப்புகளிலும் எந்தவித சமரசமும் இல்லாமல் சிறப்பாக செயல்பட்டதால் இப்போது தேசிய செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. என்னை நம்பி ஒப்படைக்கப்படும் எந்த பணியையும் ஒரு பதவியாக பார்க்காமல், அதை ஒரு பொறுப்பாகத்தான் பார்க்கிறேன். மேலும், வளரும் தலைமுறைக்கு வாய்ப்பளித்து வழிகாட்டும் கட்சி ஐயூஎம்எல். எங்களுடைய தலைவர்கள் எந்தப் பொறுப்பை எந்த சமயத்தில் யாருக்கு வழங்க வேண்டும் என்பதை நன்கு அறிவார்கள்.
தேசிய அளவில் எம்பி-க்களும், எம்எல்ஏ-க்களும் நிறைந்திருந்த ஐயூஎம்எல் தற்போது கேரளம், தமிழகத்துக்குள் மட்டும் சுருங்கி விட்டதே? நீங்கள் செயலாளரான நிலையில் வடக்கிலும் ஐயூஎம்எல் மீட்டெடுக்கப்படுமா?
இன்று நமது நாடு இருக்கும் நிலையில் வட மாநிலங்களில் குறிப்பாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேவை அதிகம் உள்ளது. கேரளம், தமிழ்நாட்டைப் போல் எங்கள் கட்சி வட மாநிலங்களிலும் வலிமையாக இருந்தால் மதவாத சக்திகள் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி வெறுப்பு அரசியலை விதைக்க முடியாது. எனவே, அங்கும் கட்சியை வலிமைப்படுத்தி பிரதிநிதித்துவத்தை மீண்டும் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
2021-ல் தமிழகத்தில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட ஐயூஎம்எல் மூன்றிலும் தோற்றுப் போனது. இம்முறை அதே எண்ணிக்கை தானா... அதே தொகுதிகளில் தான் போட்டியா?
தேர்தல் அரசியலில் வெற்றி தோல்விகள் என்பது நிலையானதல்ல. கடந்த தேர்தலின் தோல்விக்கான காரணங்களை தீவிரமாக ஆய்வு செய்துள்ளோம். இதன்படி, வெற்றி வாய்ப்பை பெறக்கூடிய தொகுதிகளை மட்டும் தான் கேட்டுப் பெற வேண்டும் என்ற தெளிவான முடிவோடு எங்கள் தலைமை உள்ளது. வெற்றி வாய்ப்பு உள்ளவர்களையே போட்டியிட வைக்கவும் உறுதியாக உள்ளனர். இந்த முறை சரியான தொகுதிகளை பெற்று வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
1962 முதல் தொடர்ந்து மூன்று முறை கேரளாவின் மஞ்சேரியில் எம்பி-யாக உங்கள் கட்சியின் நிறுவனர் காயிதே மில்லத் எம்.முகம்மது இஸ்மாயில் இருந்தபோது, மஞ்சேரிக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் இந்துக்களுக்கு ஐயூஎம்எல் வாய்ப்பளித்து வெற்றி பெற்றது வரலாறு. அந்த நிலை மீண்டும் திரும்பும் வாய்ப்புள்ளதா?
தற்போதும் கூட எங்கள் கட்சியில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். தற்போதைய தேசியப் பொதுக்குழுவில் கூட தேசிய துணைச் செயலாளராக கேரளாவின் ஜெயந்தி ராஜனும், தமிழ்நாட்டின் மாநிலச் செயலாளராக வழக்கறிஞர் ஜீவகிரிதரனும் அமர்த்தப்படுள்ளனர். தேர்தலுக்கான வேட்பாளர்களை அப்போதைய காலச் சூழலுக்கு ஏற்றவாறு தலைவர்கள் முடிவெடுக்கிறார்கள். ஆர்வமுள்ள பொருத்தமானவர்கள் கிடைத்தால் மாற்று மதத்தினராக இருந்தாலும் பொறுப்பளிக்கத் தயங்குவதில்லை.
இரண்டு முறை ராமநாதபுரத்தை வென்றுள்ள நீங்கள் தொகுதி மக்களுக்காக செய்து கொடுத்த தனிப்பட்ட சாதனையாக எதைச் சொல்வீர்கள்?
எனது தொகுதிக்குட்பட்ட சுமார் 4,200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயர் கல்விக்கு தனிப்பட்ட முறையில் என்னுடைய சொந்த நிதியிலிருந்து உதவி இருக்கிறேன். அதில் பெரும்பான்மையானவர்கள் இன்று தன்னுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி இருக்கிறார்கள். ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க, நாடாளுமன்றத்திலும், மத்திய அமைச்சரிடம் நேரிலும் சந்தித்து வலியுறுத்தியதன் பலனாக ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் 2019 முதல் மருத்துவக் கல்லூரிக்காக வலியுறுத்தியதன் பலனாக தற்போது ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி சிறப்பாக செயல்படுகிறது. ராமநாதபுரம் மிளகாய் விவசாயிகள் கோரிக்கையான, குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு சான்றும் மத்திய அரசிடம் பேசி பெற்றுத் தந்துள்ளேன். தமிழக மீனவர்களின் பிரச்சினையை அதிகமுறை நாடாளுமன்றத்தில் எழுப்பிய எம்பி நான் மட்டுமே. இப்பிரச்சினையை தீர்க்க இலங்கையின் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீன்வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்துள்ளேன்.
வக்பு திருத்தச் சட்டத்தை முஸ்லிம்கள் சிலரும் ஆதரிக்கிறார்களே?
வக்பு திருத்தச் சட்டம் என்பது அப்பட்டமாக இஸ்லாமியர்களின் இறை சொத்துகளை கபளீகரம் செய்யக்கூடியது. இதை உணர்ந்துதான் இன்று நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் மட்டுமல்ல இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஜனநாயக சக்திகள் அனைவரும் இந்த சட்டம் அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைகளை பறிக்கக் கூடியது என்பதை உணர்ந்து போராடுகிறார்கள். ஆனால், வக்பு திருத்த சட்டத்தை முஸ்லிம்கள் சிலர் ஆதரிப்பது போன்ற தோற்றத்தை பாஜக அரசு ஏற்படுத்த முயல்கிறது. இந்த போலியான பிம்பத்தை உணர்ந்த எந்த இஸ்லாமியரும் வக்பு சட்டத்தை ஆதரிக்க மாட்டார்கள்.
அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பொருந்தாத இக்கூட்டணி அமைக்க, உள்துறை அமைச்சர் ஒருவித நெருக்கடியை கொடுத்து அதிமுக-வை பணிய வைத்து மிரட்டியுள்ளார். இந்தக் கூட்டணியில் அதன் உறுப்பு கட்சிகளின் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு கூட ஒத்த கருத்து இல்லாததால் தேர்தலில் பலன் கிடைக்குமா என்பதே கேள்விக்குறி. பாஜக-வுடன் யார் கூட்டணி வைத்தாலும் அது மூழ்கக் கூடிய கப்பல் தான்.
தவெக தலைவர் விஜய் முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். ஆனால், தனது படங்களில் அவர் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே சித்தரித்து வந்திருப்பதாகச் சொல்லி முஸ்லிம்களில் சிலர் அவரை எதிர்க்கிறார்களே?
நடிகர் விஜய் அவர்கள் கடந்த காலங்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து தன்னுடைய படங்களில் காட்சிகளை வைத்ததை மக்கள் மறந்துவிடவில்லை. இதனால், பொது சமூகத்தில் இஸ்லாமியர்கள் மீது மோசமான பார்வை விதைக்கப்பட்டதையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் யாரும் மறந்து விட முடியாது. தற்போது அரசியலுக்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆனால், கடந்த காலங்களையும் இஸ்லாமிய சமூகம் நினைவில் வைத்திருக்கும்.
2026-ல் திமுக கூட்டணியில் தொடர்வதற்கு முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனைகள் ஏதும் விதிக்குமா?
திமுக-வுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொண்டிருப்பது தேர்தல் அரசியலுக்கான கூட்டணி மட்டுமல்ல கொள்கை ரீதியான கூட்டணி. எங்களுக்கு சிறப்பான முக்கியத்துவத்தை திமுக வழங்குவதால் நிபந்தனைகளுக்கு அவசியமில்லை. சட்டப்பேரவை தேர்தலில் எங்களுக்கான தொகுதிகளை கேட்டுப் பெற்று அதில் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு வெற்றி வாய்ப்பை உறுதி செய்வோம்.
பெஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நம்முடைய இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் அர்பணிப்பையும் உள்ளபடியே பாராட்டியாக வேண்டும். இந்தியா - சீனா போரின் போது எங்களுடைய கட்சியின் நிறுவனத் தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசிய போது இந்திய - சீன போருக்காக தன்னுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை பிடித்துக் கொள்ளுமாறு சொன்னார். அது மட்டுமல்ல, தன்னுடைய ஒரே மகனை நாட்டிற்காக அர்பணிக்கத் தயாராக உள்ளதாக அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு கடிதமும் எழுதினார். அவருடைய வீரமிக்க அந்த உரை ஐக்கிய நாடுகள் சபையில் ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பெல்லாம் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் குண்டு வெடிப்புகள் சர்வசாதாரணமாக நடக்கும். ஆனால், மோடி பிரதமரான நாள் முதல் குண்டு வெடிப்புகளே இல்லை என்ற நிலை வந்துவிட்டதே... காரணம் என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?
பயங்கரவாதத்தை ஒழித்திட வேண்டும் என்பதில் நாங்கள் எப்போதும் ஒத்த கருத்தோடு இருப்பவர்கள். ஆனால், நீங்கள் கூறுவது போல் கடந்த 10 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் இல்லை என்பதை விட, அவை அரசியலுக்காக பயன்படுத்தப்பட்டது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
சர்வதேச அளவில் இந்தியாவுக்கு இப்போது மதிப்பும் மரியாதையும் கூடி இருக்கிறது. அதற்குக் காரணம் மோடி என்ற பிம்பமும் பாஜக ஆட்சியும் தான் என்று சொல்லப்படுவதை ஏற்கிறீர்களா?
நாம் இன்று பார்க்கின்றோம் நம் நாட்டின் போர் நிறுத்தத்தை பற்றி அமெரிக்க அதிபர் தொடர்ந்து பேசி வருகிறார். வர்த்தகத்தைக் காட்டி போரை நிறுத்தினேன் என்கிறார். அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு பூட்டி அனுப்பப்பட்டது. நம்மை விட சிறிய நாடுகள் எல்லாம் அந்தச் செயலை கண்டித்த போதும் இந்தியா மவுனம் சாதித்தது. இதனை கண்டித்த விகடன் பத்திரிகை இணைய
தளத்தை முடக்கியது மத்திய அரசு.
திராவிட மாடல் ஆட்சியில் தமிழக மக்கள் சந்தோசமாக இருப்பதாக உங்களால் சான்றளிக்க முடியுமா?
நிச்சயமாக... அடித்தட்டு மக்கள் திராவிட மாடல் நல்லாட்சியின் மூலம் பயனடைந்திருக்கிறார்கள. விடியல் பயணம், மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை போன்றவை அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தில் நேரடியாக பங்காற்றி இருக்கிறது. கல்வித்துறையில் தமிழ்நாட்டை இந்திய அளவில் இரண்டாம் இடத்திற்கு உயர்த்தியது. மக்களை தேடி மருத்துவம், மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தொழில்துறை முதலீட்டில் தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாக உயர்த்தியது போன்றவை எல்லாம் மகத்தான சாதனை. நிச்சயமாக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.
ஆட்சிக்கு எதிராக அதிருப்திகள் இல்லவே இல்லை என்கிறீர்களா?
பொதுவாக எந்த ஒரு கட்சியும் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் ஆட்சியின் முடிவில் மக்கள் மத்தியில் அதிருப்திகள் இருக்கக்கூடும். ஆனால், திராவிட மாடல் நல்லாட்சியில் அப்படிப்பட்ட அதிருப்தி இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. எதிர்க்கட்சிகள் ஆயிரம் விமர்சனங்களை வைக்கலாம் ஆனால், மக்கள் மத்தியில் ஆட்சி குறித்த நல்லெண்ணம் மிகுந்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT