Last Updated : 24 May, 2025 03:50 PM

 

Published : 24 May 2025 03:50 PM
Last Updated : 24 May 2025 03:50 PM

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? - முதல்வர் விளக்க புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் கோரிக்கை

புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் சிவா, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி (இடமிருந்து வலமாக)

புதுச்சேரி: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து முதல்வர் ரங்கசாமி மக்களுக்கு விளக்க வேண்டும் என்று புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மாநில வளர்ச்சி, திட்ட செயல்பாடுகள், மாநிலத்துக்கான நிதி ஆதாரங்கள் போன்றவைகளை விவாதிக்கும் வாய்ப்பாக நிதி ஆயோக் கூட்டம் பயன்பட்டு வருகிறது. பின்னடைவாக இருக்கும் பல மாநிலங்கள் தங்களுடைய நிதி ஆதாரங்களை உயர்த்தி கேட்கும் கோரிக்கைகளை முன் வைப்பதற்கு இந்த கூட்டம் பயன்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை நமது முதல்வர் பயன்படுத்தாமல் புறக்கணிப்பதன் நோக்கம் புரியவில்லை. ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு அந்த கூட்டணிக்கு தலைமையேற்கும் பிரதமரை சந்தித்து மாநில வளர்ச்சிக்கு நிதி கேட்காமல் புறக்கணித்தது ஏன்?. என்னுடைய கட்சியின் உயிர் மூச்சு கொள்கையே மாநில அந்தஸ்து பெறுவது தான் என்று கூறி இந்த ஆட்சிக்காலத்தில் மட்டும் இரண்டு முறை அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர் மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமரிடம் நேரடியாக ஏன் வைக்கக் கூடாது?.

கடந்த ஓரிரு ஆண்டாகவே இந்த அரசு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு தலைமைச் செயலர் முதல் கொண்டு அதிகாரிகள் எவரும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் தனது கட்டளைக்கு ஏற்ப அதிகாரிகள் செயல்படவில்லை என்றும் இதனால் மாநில வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்றும் பொதுவெளியில் புலம்பி தீர்க்கும் முதல்வர் இவைகளை களைவதற்கு இந்த கூட்டத்தை ஏன் பயன்படுத்தி இருக்கக் கூடாது?

நிதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் பங்கேற்று இருந்தால் 16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையில் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களை போல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் நிதி ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி இருக்கலாம். ஜிஎஸ்டியால் மாநிலத்துக்கு வரவேண்டிய பங்குத்தொகை முறையாக வரவில்லை என்பதையும், சாதாரண மக்கள் மீது நாளுக்கு நாள் வரி எதிர்ப்பு அதிகமாகிப் போவதையும் முதல்வர் பிரதமரிடம் சுட்டிக்காட்டி இருக்கலாம்.

மாநிலங்களுக்கு எல்லாம் 42 சதவீதம் மத்திய நிதியுதவி தொடர்கின்ற பொழுது, முன்பு 70 சதவீத அளவுக்கு நிதியுதவி பெற்ற புதுச்சேரிக்கு வெறும் 25 சதவீதம் கூட நிதி இல்லாத அவலத்தை சுட்டிக்காட்டி இருக்கலாம். மேலும், புதுச்சேரிக்கு என்று தனி கணக்கு தொடங்குவதற்கு முன் புதுச்சேரி அரசு வெளி மார்க்கெட்டில் பெற்ற கடனை தள்ளுபடி செய்யவும், புதுச்சேரி மாநிலத்திற்கு என்று நீண்ட நாள் கடனாக உள்ள ரூ. 11.500 கோடி கடனை தள்ளுபடி செய்யவோ அல்லது அதற்கு கட்டப்படும் வட்டியை மத்திய அரசு பங்கிட்டுக் கொள்ளச் செய்யவும் கோரி இருக்கலாம்.

ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களில் அனைத்து வேலைவாய்ப்புகளிலும், புதுச்சேரி மாணவர்களுக்காக 25 சதவீதம் உள் ஒதுக்கீடும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பாட பிரிவுகளுக்கும் 25 சதவீத உள் ஒதுக்கீட்டையும் புதுச்சேரி மாணவர்களுக்காக வழங்கவும், சட்டப்பேரவை புதிய கட்டிடம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், சுற்றுலா வளர்ச்சி உள்ளிட்ட திட்டங்களுக்கு எல்லாம் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்காததால் மாநில வளர்ச்சி முடங்கி கிடப்பதை பிரதமரிடம் சுட்டிக்காட்டி இருக்கலாம்.

எதிர்க்கட்சியாக ஒரு அரசை தலைமையேற்று மத்திய அரசின் பல்வேறு முட்டுக்கட்டைகளை எல்லாம் சந்தித்து வருகின்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இவைகளை எல்லாம் கடந்து மாநில மக்களுக்கு ஏதாவது ஒரு உதவி கிடைக்காதா என்ற நம்பிக்கையோடு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று உள்ளார்.

அடிப்படை தேவையான கல்விக்கான நிதியை கூட ஒதுக்காத மத்திய அரசு மீது கடந்த ஓராண்டாக சட்டப் போர் நடத்தி வரும் நிலையில் கூட அவர் இந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் நம்முடைய முதல்வர் இந்தக் கூட்டத்தைப் புறக்கணிப்பது ஏன் என்பது பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x