Published : 22 May 2025 05:54 AM
Last Updated : 22 May 2025 05:54 AM

37 ஆயிரம் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்க ரூ.30.65 கோடி ஒதுக்கீடு

கோப்புப் படம்

சென்னை: நடப்பாண்டில் 37 ஆயிரம் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்க ரூ.30.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை தவிர 37 மாவட்டங்களிலும் ஊரக வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைகள் வழங்க மாநில அளவிலான ஆலோசனைக் குழுக் கூட்டம் ஒவ்வொரு 6 மாதகால இடைவெளியில் நடத்தப்படும்.

இந்தக் குழுவில் பல்வேறு வங்கிகளின் அலுவலர்கள், நபார்டு வங்கியின் பிரதிநிதிகள், மாநில அளவிலான வங்கிகளின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களின் இயக்குநர்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அலுவலர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த 8-வது மாநில அளவிலான ஆலோசனைக் குழுக் கூட்டம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமை தாங்கி பேசுகையில், “நடப்பு ஆண்டு முதல் அதிக வேலைவாய்ப்புகளை கொண்ட செல்போன் பழுது நீக்குதல், ஓட்டுநர் உரிமம் பயிற்சி, வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்குதல், கான்கிரீட் கொத்தனார் பயிற்சி, பிளம்பிங் பயிற்சி, தச்சு பயிற்சி, இருசக்கர வாகன பழுது நீக்குதல், ஒயரிங், வெல்டிங், அலுமினியம் பேப்ரிகேஷன் பயிற்சி என 10 தொழில்களில் புதிய திறன் பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

பயிற்சிகளை முடித்தவர்களுக்கு சுய தொழில் மேற்கொள்வதற்காக வங்கிக் கடன் உதவிகள் பெற்றுத் தரப்படும். அந்தவகையில் நடப்பாண்டில் 37 ஆயிரம் கிராமப்புற இளைஞர்களுக்கு ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களின் வாயிலாக பல்வேறு தொழில்களில் திறன் பயிற்சிகள் வழங்க ரூ.30.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சி நிறுவனங்களுக்கு உண்டு, உறைவிட வசதியுடன் கூடிய தனி பயிற்சிக் கட்டிடம் கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x