Last Updated : 21 May, 2025 03:37 PM

1  

Published : 21 May 2025 03:37 PM
Last Updated : 21 May 2025 03:37 PM

உள்நாட்டுப் பாதுகாப்பு விவகாரம்: மத்திய அரசு மீது செல்வப்பெருந்தகை விமர்சனம்

செல்வப்பெருந்தகை | கோப்புப்படம்

சென்னை: “பஹல்காம் சம்பவம் போன்ற தாக்குதல்களில் மத்திய அரசின் நடவடிக்கைகள் மந்தமாகவும், திட்டமில்லாதவையாகவும் இருப்பது மக்கள் மத்தியில் நம்பிக்கை குறைவையும், உள்நாட்டுப் பாதுகாப்பு மீதான ஐயப்பாடுகளையும் எழுப்புகிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 34-வது நினைவு நாளான இன்று, தமிழ்நாடு காங்கிரஸ் அவரது தியாகத்தையும், தொலைநோக்கு பார்வையையும், இந்தியாவின் வளர்ச்சிக்காக ஆற்றிய பங்களிப்புகளையும் மிகுந்த மரியாதையுடன் நினைவுகூர்கிறது. மே 21 - தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நாளாகும். இந்த நாள், இந்திய மக்களின் ஒற்றுமையையும், நாட்டின் பாதுகாப்பையும், பல உயிர்த் தியாகங்களை நினைவுபடுத்தும் ஓர் உணர்வுமிக்க தருணமாக அமைந்துள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக, இந்தியா எப்போதும் உறுதியுடன் எதிர்நின்றுவரும் என்பதை உலகுக்கு தெளிவாகக் கூறும் நாளாகவும் இது விளங்குகிறது.

ராஜீவ் காந்தி இந்திய அரசியலுக்கு ஒரு புதிய தலைமுறையின் முகமாகக் கருதப்படுபவர். இளம்வயதில் பிரதமராகப் பதவியேற்று, இந்தியாவில் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கான அடித்தளங்களை அமைத்தார். 1980களில் கணினி தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் இருந்த உலகை நோக்கிப் பார்த்த அவர், இந்தியாவை அந்த பாதையில் அழைத்துச் செல்வதற்கான முக்கியத் தீர்மானங்களை எடுத்தார். அவரது தொலைநோக்குப் பார்வை இன்றைய இந்திய ஐடி துறையின் தளங்களை அமைத்த முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. தொலைத்தொடர்பு வசதிகளை மக்களின் உள்ளே கொண்டு சேர்த்து, உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில் இந்தியாவைக் கட்டமைத்தார்.

கிராம நிர்வாகத்தில் மக்களின் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில், பஞ்சாயத்து ராஜ் அமைப்பை நிறுவினார். இதன் மூலம், அதிகாரப் பரிமாற்றம் ஊராட்சித்தலத்துக்கே செல்லும் ஒரு ஜனநாயக அடித்தளத்தை உருவாக்கினார். மக்களுடன் நேரடித் தொடர்புடைய தீர்மானங்கள், நிதி பயன்பாடுகள், திட்டங்கள் ஆகியவை ஊராட்சி நிலையங்களில் தீர்மானிக்கப்படுவதற்கான வழியை உருவாக்கினார். இது, ஒவ்வொரு கிராம மக்களுக்கும் உரிமை உணர்வையும், வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தியது.

மேலும், விண்வெளி ஆராய்ச்சி துறையில் இந்தியாவை முன்னேற்றும் பல திட்டங்களை அவர் துவக்கினார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் பல முக்கிய முயற்சிகள் அவரது ஆட்சிகாலத்தில் வளர்ச்சியடைந்தன. தேசிய பாதுகாப்பு, தொலைநோக்குக் கல்வி, மற்றும் தகவல் பரிமாற்றத்தில் விண்வெளித் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் புதிய நடைமுறைகளையும் அவர் ஊக்குவித்தார்.

நாட்டின் வளர்ச்சிக்காக தொலைநோக்குப் பார்வையுடன் பணியாற்றிய ராஜீவ் காந்தி, 1991ம் ஆண்டு மே 21 அன்று, தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தது, இந்திய அரசியலின் பாதையில் மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது. அவருடைய உயிர்த் தியாகம், இந்திய ஒற்றுமையின் மீதான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் விட்டுச் சென்ற கனவுகள், குறிப்பாக, ஒரு சகிப்புத்தன்மை கொண்ட, வன்முறை இல்லாத, தொழில்நுட்ப முன்னேற்றம் வாய்ந்த இந்தியாவுக்கான இலக்குகள், இன்னும் பல ஆண்டுகளுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், சமீபத்தில் ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இது நம்மை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இது நாட்டின் பாதுகாப்புக்கு நேர்ந்த சவாலாகவும், பாதுகாப்பு அமைப்புகளின் ஆக்கபூர்வ செயல்பாடுகள் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய தருணமாகவும் அமைந்துள்ளது. இத்தகைய தாக்குதல்களில் மத்திய அரசின் நடவடிக்கைகள் மந்தமாகவும், திட்டமில்லாதவையாகவும் இருப்பது, மக்கள் மத்தியில் நம்பிக்கை குறைவையும் உள்நாட்டுப் பாதுகாப்பு மீதான ஐயப்பாடுகளையும் எழுப்புகிறது.

இந்நிலையில், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி , நேரடியாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், வெற்றிகரமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். “இந்தியாவின் மீது நிகழும் பயங்கரவாதத் தாக்குதல்களை அமைதியாக கடந்து விட முடியாது. குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்” என்ற அவரது கூற்று, நாட்டின் பாதுகாப்பு மற்றும் வீரர்களின் மரியாதைக்கான அரசியல் முன்னேற்றத் திசையைக் காட்டுகிறது. இது தேசிய பாதுகாப்பு, பாதுகாப்புப் பிரிவுகளின் திறமை, மற்றும் வெளிநாட்டு ஆதிக்க எதிர்ப்பின் அடிப்படையில் பாராட்டப்பட வேண்டிய தெளிவான பிரமாணமாகும்.

அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகள், இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அரசு நடவடிக்கைகளில் நடுநிலைப் போக்கைக் காட்டும் பெயரில் தலையிடுவதாக கூறப்படும் செயல்களை ராகுல் காந்தி கடுமையாக எதிர்த்தார். இந்தியாவின் பாதுகாப்பு கொள்கைகள் வெளிநாடுகளால் நிர்ணயிக்கப்பட முடியாது. நாம் ஒரு சுயாதீன நாடு, என்ற அவரது வலியுறுத்தல், ஒரு தேசியக் குரலாக திகழ்கிறது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலாக, இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்கு ராகுல் காந்தி உறுதியான ஆதரவை தெரிவித்தார். அவர் இந்திய ஆயுதப்படைகளை பாராட்டி “எங்கள் ஆயுதப்படைகளின் பெருமை ஜெய்ஹிந்த்” என்று கூறினார். அதே நேரத்தில், இந்த நடவடிக்கைக்கு முன்பே பாகிஸ்தான் அரசுக்கு தகவல் தெரிவித்தோம் என்ற வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் ஒரு வீடியோவை மேற்கோளாகக் காட்டிய அவர், இதை “ஒரு குற்றம்” என்றும், இதற்கான அனுமதியை வழங்கியது யார் என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு, அதன் அரசியல் சுதந்திரம் மற்றும் மக்களின் நன்மை என்பவை ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. இத்தகைய நேரங்களில், அரசாங்கம் தனது கடமைகளை தவறவிடாது, பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய ஒற்றுமை, சமாதானம், பாதுகாப்பு ஆகியவற்றை சீராக நிலைநிறுத்தும் பொறுப்புணர்வு அரசின் அதிகாரத்துக்கு அடிப்படையாக இருக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில், காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி, வீர மரணங்களுக்கும், வளர்ச்சிக்கான கனவுகளுக்கும் உண்மையான மரியாதை செலுத்தும் உறுதியுடன் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x