Published : 21 May 2025 03:03 PM
Last Updated : 21 May 2025 03:03 PM
சென்னை: “தமிழகம் முழுவதும் சுமார் 1.75 லட்சம் மாணவர்கள் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி விண்ணப்பம் செய்துள்ளனர். சில தனியார் பள்ளிகளில் மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கான இணைய தளத்தை முடக்கி வைத்திருக்கின்றனர். எனவே, தமிழக அரசு, மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு நிதியினை வழங்கி RTE சட்டப்படி முழுமையாக மாணவர் சேர்க்கைக்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன் படி ஏழை, எளிய மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டுக்கு தமிழக அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தர வேண்டிய தொகை நிலுவையாக உள்ளது என்கிற காரணத்தை முன்னிறுத்தி RTE-படி 25% இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன. இதில் தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை உடனடியாக தலையிட்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவிகித இட ஒதுக்கீட்டை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
சர்வ சிக்ஷா அபியான் (SSA) திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு தரவேண்டிய ரூபாய் 2000 கோடிக்கு மேலான நிதி பங்கீட்டை மத்திய அரசு கொடுக்க மறுத்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக தமிழகத்தில் 7 லட்சம் மாணவர்களுக்கு மேலாக கிடைக்க வேண்டிய கல்வி வாய்ப்பு பறிபோகும் நிலை இருக்கிறது.
இவ்வாண்டு தமிழகம் முழுவதும் சுமார் 1.75 லட்சம் மாணவர்கள் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி விண்ணப்பம் செய்துள்ளனர். சில தனியார் பள்ளிகளில் மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கான இணைய தளத்தை முடக்கி வைத்திருக்கின்றனர். எனவே, தமிழக அரசு, மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு நிதியினை வழங்கி RTE சட்டப்படி முழுமையாக மாணவர் சேர்க்கைக்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். தனியார் பள்ளி நிர்வாகங்களும் 75 சதவிகிதம் மாணவர்களிடம் கட்டணத்தை வசூலிக்கும் நிலையில் அரசு நிதி தாமதமாவதை காரணமாக காட்டி 25 சதவிகித மாணவர் சேர்க்கையை மறுப்பது நியாயமல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
மத்திய அரசு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தையே முடமாக்கும் வகையில் இச்சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை மாநிலங்களுக்கு வழங்காமல் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி மாணவர்களின் கல்வி வாய்ப்பை மறுக்கும் வகையில் நடந்து கொள்வது வன்மையான கண்டனத்துக்குரியது. மத்திய அரசிடமிருந்து நிதியை பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளும் அதேநேரத்தில், தனியார் கல்வி நிறுவனங்களில் RTE சட்டப்படி மாணவர்கள் சேர்க்கைக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT