Published : 21 May 2025 09:08 AM
Last Updated : 21 May 2025 09:08 AM
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி ஏழு மண்டலப் பொறுப்பாளர்களை அண்மையில் அறிவித்தது திமுக தலைமை. இதில் விழுப்புரத்தை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்தின் பொறுப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு நியமிக்கப்பட்டார். இதில் எழுந்த புகைச்சலை அடக்க, எட்டாவது மண்டலப் பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
1989-ல் திக இறக்குமதியாக திடீர் வேட்பாளராக பேராசிரியர் பொன்முடியை விழுப்புரத்தில் களமிறக்கியது திமுக தலைமை. அந்தத் தேர்தலில் வென்ற அவருக்கு அமைச்சரவையிலும் முக்கிய இடமளித்தார் கருணாநிதி. அது முதலே பொன்முடிக்கு பொற்காலம் தான். குறுகிய காலத்தில் தன்னை திமுக தலைமைக்கு நெருக்கமாக்கிக் கொண்ட பொன்முடி, சீக்கிரமே ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டச் செயலாளர் அளவுக்கு கட்சிக்குள் தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டார். இப்படியெல்லாம் திமுக-வுக்குள் தன்னை வளர்த்துக் கொண்ட பொன்முடி, தற்போது எந்தப் பதவியும் இல்லாமல் எம்எல்ஏ என்ற ஒற்றை அடையாளத்துடன் மட்டும் நிற்கிறார்.
பேச்சில் கில்லாடி, பேரவை நாயகன் என்றெல்லாம் பெயரெடுத்த பொன்முடி, இப்போது, பேசக்கூடாததை பேசி அதிகாரத்தை இழந்து நிற்கிறார். இது குறித்து நம்மிடம் பேசிய விழுப்புரம் திமுக-வினர், “அமைச்சர் பதவியையும், துணைப் பொதுச்செயலாளர் பதவியையும் இழந்திருக்கும் பொன்முடி, விழுப்புரம் மாவட்ட திமுக-வில் தன்னை மீறி யாரும் தடம்பதித்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.
இந்த நிலையில், அவருக்கு பிடிக்காத அமைச்சர் எ.வ.வேலுவை வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக தலைமை அறிவித்தது. ஏற்கெனவே, விழுப்புரத்தில் இருந்து பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சராக பொன்முடியை தவிர்த்துவிட்டு வேலுவை நியமித்ததையே பொன்முடி தரப்பினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்துக்கு வேலுவை தேர்தல் பொறுப்பாளராக போட்டது பொன்முடி விசுவாசிகளை பொறுமை கடக்க வைத்துவிட்டது.
இதற்கிடையில் வேலுவின் வருகையை கொண்டாடிய பொன்முடிக்கு பிடிக்காத விழுப்புரம் மாவட்ட எம்எல்ஏ-க்களும் கட்சி நிர்வாகிகளும் வேலுவை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். விழுப்புரம் எம்எல்ஏ-வான லட்சுமணன், செஞ்சி எம்எல்ஏ-வான முன்னாள் அமைச்சர் மஸ்தான் ஆகியோர் சுவர் விளம்பரங்கள், மற்றும் போஸ்டர்களில் எ.வ.வேலுவின் பெயரையும் படத்தையும் பெரிதாகப் போட்டதுடன் பொன்முடியின் படத்தையோ பெயரையோ போடாமல் இருட்டடிப்பு செய்தார்கள்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு உஷாரான பொன்முடி தரப்பினர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைப் போலவே, விழுப்புரத்தையும் எ.வ.வேலு தனது கைக்குள் கொண்டுபோய் விடுவாரோ என அச்சப்பட்டார்கள். வேலு நியமனம் தொடர்பாக முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் தனது ஆதங்கத்தை பொன்முடி வெளிப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். இதையடுத்தே, கடலூர் கிழக்கு, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களுக்கான தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை நியமித்திருக்கிறது தலைமை” என்றனர்.
மண்டலப் பொறுப்பாளர்களில் வன்னியர் சமூகத்திக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்ற குறையைப் போக்கவே எம்ஆர்கே-யை மண்டலப் பொறுப்பாளராக நியமித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் எதிரும் புதிருமாக இருந்த எம்ஆர்கே-யும் பொன்முடியும் அதிமுக வரவுகளான லட்சுமணன் உள்ளிட்டவர்களின் குடைச்சலை சமாளிக்க தற்போது கைகோத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இதனிடையே, தேர்தல் பொறுப்பாளராக எம்ஆர்கே நியமிக்கப்பட்டதை வரவேற்று சுவர் விளம்பரங்களை தீட்டிய பொன்முடி ஆதரவாளர்கள், அவற்றில் பொன்முடியின் பெயரையும் பெரிதாகப் போட்டு எதிர்த்தரப்புக்கு எரிச்சலூட்டி இருக்கிறார்கள். ஆக, தேர்தல் வெற்றிக்காக அறிவிக்கப்பட்ட மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனத்தால் விழுப்புரம் திமுக-வுக்குள் கோஷ்டி கானம் இன்னும் சத்தமாகக் கேட்க ஆரம்பித்திருக்கிறது. இது எங்கு போய் முடியுமோ!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT