Published : 18 May 2025 03:48 PM
Last Updated : 18 May 2025 03:48 PM
தென்காசி: “மதவாத சக்திகளை உறுதியாக எதிர்க்கும் தலைமையாக திமுக உள்ளது. அதனால் திமுக கூட்டணியில் உள்ளோம். கூட்டணியில் சில ஏமாற்றங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. தமிழகத்தின் எதிர்காலம் கருதி திமுக கூட்டணியில் உள்ளோம்.” என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளோம்.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வீரகேரளம்புதூர் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசு நெடுஞ்சாலைகளில் உள்ள சில சுங்கச்சாவடிகளை அகற்றுவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் புதிதாக சுங்கச்சாவடிகளை அமைத்து வருகிறது. சுங்கச்சாவடிகளில் வசூலாகும் பணத்தை வைத்து சாலையையும் சரியான முறையில் சீரமைப்பதில்லை. இதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளது.
தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறும் வகையில் சட்டப்பேரவை தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம். கரோனா இரண்டாம் அலை, கடுமையான நிதி நெருக்கடி போன்ற இக்கட்டான நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தது. அதையெல்லாம் கடந்து திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது.
மத்திய அரசின் நெருக்கடி, நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் போன்ற இக்கட்டான நிலையிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்ற லட்சியம், ஆசை எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இருக்கும். தமிழகத்தில் இண்டியா கூட்டணி வலுவான நிலையில் உள்ளது. மதவாத சக்திகள் தமிழகத்தில் வேரூன்ற முயற்சிக்கும் இந்த காலகட்டத்தில் கூட்டணியில் குழப்பத்தை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை.
அதனால் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என நாங்கள் கேட்கப்போவதில்லை. தேர்தல் அங்கீகாரம் பெறுவதற்கான அளவில் திமுக கூட்டணியில் இடம் கேட்போம். அண்ணா காலத்தில் இருந்ததை விட, கருணாநிதி காலத்தில் இருந்ததை விட அதிகமாக அச்சுறுத்தும் வகையில் மதவாத சக்திகள் நெருக்கடி இப்போது உள்ளது. மதவாத சக்திகளை உறுதியாக எதிர்க்கும் தலைமையாக திமுக உள்ளது. அதனால் திமுக கூட்டணியில் உள்ளோம். கூட்டணியில் சில ஏமாற்றங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. தமிழகத்தின் எதிர்காலம் கருதி திமுக கூட்டணியில் உள்ளோம்.
பாஜவுடன் சேரமாட்டோம் என விஜய் சொல்லியுள்ளார். அதனால் மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு உள்ளது. கடந்த காலங்களில் மூன்றாவது அணி உருவாக்க முயற்சித்தாலும் அது வெற்றி பெறவில்லை. திமுக கூட்டணி அல்லது அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நிலைதான் தமிழகத்தில் உள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT