Published : 18 May 2025 12:14 AM
Last Updated : 18 May 2025 12:14 AM
அரபிக் கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "அரபிக் கடலில் கர்நாடக கடலோரப் பகுதியையொட்டி வரும் 21-ம் தேதி புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். அதன் தாக்கத்தால், அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, வடக்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, வரும் 27-ம் தேதி கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கான மழை வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 22, 23-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும், வரும் 19-ம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 20 மற்றும் 23-ம் தேதிகளில் கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று முதல் 21-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை குறைவாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 10 செ.மீ., கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், கடலூர் மாவட்டம் பெலாந்துறை, கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பார் அணை ஆகிய இடங்களில் 7 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் போளூர், வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் கேஆர்பி அணை, திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுப்பட்டு ஆகிய இடங்களில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது
இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT