Published : 16 May 2025 09:43 AM
Last Updated : 16 May 2025 09:43 AM
இவரை எல்லாம் ஸ்டாலின் அத்தனை எளிதில் கைவைக்க மாட்டார் என நினைத்துக் கொண்டிருந்த துரைமுருகனின் வேலூர் மாவட்ட திமுகவினர், அவரது இலாகா மாற்றத்தால் சற்றே ஷேக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.
கருணாநிதி முதல்வராக இருந்த போது மூத்த அமைச்சர் துரைமுருகன் தனித்த செல்வாக்குடன் வலம் வந்தார். தனது அணுகுமுறைகளால் அடிக்கடி அதிருப்திகளுக்கு ஆளானாலும் கருணாநிதி அவரை கடிந்து கொண்டதில்லை. காரணம், நெருக்கடியான நேரங்களில் கட்சிக்காக துரைமுருகன் தந்திருக்கும் பங்களிப்பு அப்படி. ஆனால், கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கட்சிக்குள் துரைமுருகனுக்கான இருப்பு சரியத் தொடங்கியது. அதைத் தெரிந்து கொண்டு பல நேரங்களில் அவரும் வெளிப்படையாகவே புலம்பவும் ஆரம்பித்தார். “இன்பநிதி அமைச்சரவையிலும் இந்த அவையில் இருப்பேன்” என்று சொன்னதெல்லாம் அதன் வெளிப்பாடு தான்.
துரைமுருகன் மீது தனக்கு சங்கடங்கள் இருந்தாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் இருந்தார் ஸ்டாலின். பேசக்கூடாத வார்த்தைகளைப் பேசியதால் பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்தும் கட்சிப் பதவியிலிருந்தும் அடுத்தடுத்து தூக்கிய ஸ்டாலின், அதேபோன்று ஒரு சர்ச்சையில் சிக்கிய துரைமுருகனை கண்டும் காணாமல் விட்டிருந்தார். தான் பேசிய வார்த்தைகளுக்காக வலிய வந்து வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன். இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, துரைமுருகனிடம் இருந்த கனிமவளத் துறையை ரகுபதி வசம் ஒப்படைத்த ஸ்டாலின், ரகுபதி வசமிருந்த சட்டத் துறையை துரைமுருகன் வசம் ஒப்படைத்திருக்கிறார்.
திமுக ஆட்சியில் பெரும்பாலும் பொதுப்பணித்துறைக்கே அமைச்சராக இருந்திருக்கிறார் துரைமுருகன். ஆனால், இந்த முறை பொதுப்பணித்துறையை தனியாக பிரித்து எ.வ.வேலுவிடம் தந்த ஸ்டாலின், துரைமுருகனுக்கு நீர்வளத் துறையையும் கனிம வளத்துறையையும் தந்தார். ஏற்புடையதோ இல்லையோ இந்த மாற்றத்தை குறைசொல்லாமல் ஏற்றுக் கொண்டார் துரைமுருகன். ‘வளம் தரும்’ பொதுப்பணித் துறை இல்லை என்றாலும் கனிமவளத் துறை கைவசமிருக்கிறதே என்று துரைமுருகனின் விசுவாசிகளும் கொண்டாட்டத்தில் தான் இருந்தார்கள்.
இந்நிலையில், இப்போது திடீரென நடந்திருக்கும் இந்த இலாகா மாற்றம் குறித்து திமுக தரப்பில் எழுந்த விவாதங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. கடந்த 4 ஆண்டுகளில் மணல் விற்பனையில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடத்திருப்பதாக கூறி சில மாதங்களுக்கு முன்பு கட்டுமான நிறுவனங்கள், மணல் குவாரிகளில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டுகளை நடத்தினர். காட்பாடி, சென்னையில் உள்ள துரைமுருகனுக்குச் சொந்தமான வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது. தமிழகத்தில் இருந்து கனிமங்கள் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
இது குறித்து சட்டமன்றத்தில் அதிமுக-வினர் எழுப்பிய கேள்விக்கு துரைமுருகன் அளித்த பதில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கே திருப்தி அளிக்கவில்லை. மேலும், கட்டுமான பொருட்களின் திடீர் விலை ஏற்றத்தால் கட்டுமான நிறுவனங்கள் அரசுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தன. அரசு ஒப்பந்ததாரர்கள் கூட கட்டுமான வேலைகளைத் தொடர முடியாமல் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர். இதையெல்லாம் துரைமுருகன் திறம்படக் கையாள தவறிவிட்டதாக கட்சித் தலைமை அதிருப்தி அடைந்ததாகச் சொல்கிறார்கள். மணல் அதிபர்களுக்கு அனுசரணையாக நடந்ததுடன், மணல் குவாரிகள் தொடர்பான ‘கணக்கு வழக்கு’களை தருவதிலும் துரைமுருகன் சுணக்கம் காட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்துத்தான் அவரிடமிருந்த கனிமவளத்துறையை பறித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதுகுறித்து திமுக-வின் காட்பாடி பகுதிச் செயலாளர் வன்னியராஜாவிடம் கேட்டதற்கு, “இலாகா மாற்றம் என்பது முதல்வர் எடுக்கும் முடிவு. எந்தத் துறைக்கு யார் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதை மனதில் வைத்துத் தான் முதல்வர் ஒரு சில முடிவுகளை எடுக்கிறார். அதன்படி சட்ட ரீதியாக சந்திக்க வேண்டிய பல விஷயங்கள் திமுக-வுக்கு இருப்பதால் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ‘கனிமவளத் துறை எனக்கு வேண்டாம். கட்சிக்காரர்களையும் திருப்திப்படுத்த வேண்டும், அரசையும் திருப்திப்படுத்த வேண்டும் என்றால் என்னிடம் கனிமவளத் துறை இருக்கக்கூடாது’ என 6 மாதங்களுக்கு முன்பே முதல்வரிடம் துரைமுருகன் சொல்லிவிட்டார்.
துரைமுருகன் சட்டம் படித்தவர் என்பதால் சட்ட நுணுக்கங்களை அறிந்தவர். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதை சட்டரீதியாக அவரால் அணுக முடியும் என்பதால் அவருக்கு சட்டத் துறை வழங்கப்பட்டுள்ளது. இதில், எங்களுக்கு எந்த ஒரு வருத்தமும் இல்லை. அமைச்சர் பதவியை பறித்தால் தான் நாங்கள் வருத்தப்பட வேண்டும். எந்தத் துறையாக இருந்தால் என்ன... அமைச்சர் அமைச்சர் தானே?” என்றார் கூலாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT