Published : 16 May 2025 12:50 AM
Last Updated : 16 May 2025 12:50 AM

சில மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஆகிய இடங்களில் 9 செ.மீ., தருமபுரி மாவட்டம் அரூர், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் 7 செ.மீ., காரைக்காலில் 6 செ.மீ., நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டம் கோவில்பட்டி, சேலம் மாவட்டம் சங்ககிரி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 16) முதல் வரும் 19-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 20-ம் தேதி சில இடங்களிலும், 21-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும், நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும், வரும் 18-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x