Published : 13 May 2025 07:55 PM
Last Updated : 13 May 2025 07:55 PM
மதுரை: “தீவிரவாத முகத்துடன் யார் வந்தாலும், அவர்களை எதிர்கொள்ள இந்தியாவுக்கு தெரியும்” என ஆந்திரா மாநில எம்எல்ஏ சுந்தரபு விஜயகுமார் திருப்பரங்குன்றத்தில் கருத்து தெரிவித்தார்.
ஜனசேனா கட்சி நிர்வாகியும், ஆந்திரா மாநிலம் எலமஞ்சிலி தொகுதி எம்எல்ஏ-வுமான சுந்தரபு விஜயகுமார் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (மே 13) தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் வழிகாட்டுதல்படி தமிழகத்திலுள்ள 6 முக்கிய முருகன் கோயில்களிலும் வழிபாடு நடத்தப்பட்டது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தச் சடங்குகள் நடத்தப்பட்டன. இது நமது ஆயுதப் படைகளுக்கு ஆன்மிக ரீதியில் ஆதரவளிக்கும். இந்தியாவின் ராணுவ வலிமையை உலகுக்கு அடையாளப்படுத்துவதே நோக்கம். குறிப்பாக ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் , குஜராத் போன்ற பதற்றமான எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள நமது வீரர்களுக்கு தெய்வீகப் பாதுகாப்பு, வலிமை அவசியம் என பவன் கல்யாண் வலியுறுத்தினார்.
தேசம் முதலில் வரவேண்டும் என்ற நம்பிக்கையை அவர் எப்போதும் பேணுகிறார். தேசியவாதத்தின் உணர்வு இந்த முயற்சிக்கு வழிகாட்டியது. சமீபத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் தங்கள் மதத்தின் அடிப்படையில் கொல்லப்பட்டது, பாகிஸ்தானால் ஊக்குவிக்கப்பட்ட பயங்கரவாதத்தின் கொடூரமான செயல். இந்தியா வலிமையுடனும் தெளிவுடனும் பதிலளித்தது. பாகிஸ்தான் போர் நிறுத்தம் பற்றி பேசினாலும், அதன் நடவடிக்கை வஞ்சகத்தை காட்டிக் கொடுத்தன.
நமது படைகள் உறுதியான, பொருத்தமான பதிலடி அளித்தன.
பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல், ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்கிறது. அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். நமது ஆயுதப்படைகள் மற்றும் தேசிய தலைமைக்கு ஆதரவாக ஒன்றுபட வேண்டும். போரை நிறுத்துவதற்கு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழுத்தம் கொடுக்கவில்லை. ஏனென்றால் இது போர் இல்லை. அவர்கள் செய்தது ஒரு தீவிரவாதச் செயல். தீவிரவாத முகத்துடன் யார் வந்தாலும் அவர்களை எதிர்கொள்ள இந்தியாவுக்குத் தெரியும்.மோடியின் வலுவான தலைமையின் கீழ், ஒவ்வொரு மனிதனும் பாதுகாப்பாக இருக்க முடியும்” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT