Published : 11 May 2025 09:25 PM
Last Updated : 11 May 2025 09:25 PM
கோவில்பட்டி: அமெரிக்கா தலையீட்டில் போர் நிறுத்தம் என்று செய்திகள் வருகின்றன. இதனையே இந்திய அரசும் தெரிவித்துள்ளது. 5-வது வல்லரசு நாடாக இந்தியா உள்ளது. நம்முடைய நிலமையை இன்னொரு நாடு முடிவெடுப்பது இருப்பது ஏற்புடையது அல்ல. போர் நிறுத்தம் என்பதை இந்தியா தான் அறிவிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இன்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த ஏப்.30-ம் தேதி முதல் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறேன். மே 22-ம் தேதி முதல் மீண்டும் ஒன்றியம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள் உள்ளேன். கடந்த 10 நாட்களில் சுமார் 200 கிராமங்கள் வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டதில், பல்வேறு கிராமங்களில் இன்னும் உள்ளாட்சி அமைப்புகள் முறையாக செயல்படாத காரணத்தால் பெரும்பாலான கிராமங்களில் குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் இல்லாமல் காணப்படுகின்றன. இதில், தேவேந்திரகுல மக்கள் வாழும் பகுதிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஒன்றியங்களில் இதே நிலைமை உள்ளது. இதுகுறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்துக்கான ரூ.2 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த திட்டத்தில் முறைகேடுகள் நடந்து கொண்டுதான் உள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் 100 நாள் வேலை திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். இல்லையெனில் புதிய தமிழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும். 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய குடும்பங்கள் அழிந்துவிட்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியது அபசகுணமான வார்த்தை.
சமூக நீதிக்கும் இந்த ஆட்சியாளர்களுக்கும் சம்பந்தமே கிடையாது. தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டை மட்டுமே வைத்து சமூக நீதி பேசப்படுகிறது. ஆனால், 18 சதவீத தேவேந்திரகுல வேளாளர் சமூகத்துக்கான இடஒதுக்கீடு கொடுக்கப்படாமல் ஏமாற்றப்படுகிறது. தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீட்டை அருந்ததியருக்கு எந்தவித காரணம் கொண்டு தாரை வார்க்க கூடாது. அதற்கு இந்த அரசே உடந்தையாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி திருச்சியில் மே 17-ம் தேதி ஆர்ப்பாட்டமும், பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம்.
புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு டிசம்பர் மாத இறுதியில் மதுரையில், 2026-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை முன்வைத்து நடைபெற உள்ளது. தேர்தல் நேரங்களில் கூட்டணி சேர்க்கப்படுகின்றன. தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி முறிந்து போய்விடுகிறது. லட்சக்கணக்கான தேவேந்திரகுல வேளாளர் மக்கள் வாக்குகளை வாங்குகின்றனர். அதன் பின்னர் அந்த மக்களுக்கு எந்தவித நன்மைகளையும் செய்யாமல் புறக்கணித்துவிடுகின்றனர். இதனால் வாக்களித்த மக்கள் ஏமாற்றமடைகின்றனர். எனவே, அனைவரும் சேர்ந்த ஆட்சி அமைப்பதன் மூலம் அரசின் திட்டங்கள் முறையாக கடைக்கோடி மக்கள் வரை சென்றடையும் என்பது புதிய தமிழகம் கட்சியின் நோக்கம். கூட்டணியை முடிவு செய்ய இன்னும் நிறைய காலம் உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்களிக்க கூடிய கட்சியுடன் கூட்டணி அமையும். இன்றைக்கு இருக்கும் ஆட்சியை அகற்ற வேண்டும். அதற்கு மிகப்பெரிய வலுவான கூட்டணியாக அமையும். அது ஆட்சி அதிகாரத்தில் பங்களிக்கக்கூடிய கூட்டணியாக இருக்க வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. அதனால் இந்த ஆட்சியை 4 ஆண்டுகள் பொருத்ததே பெரிய விஷயம். மக்கள் இந்த நேரம் பொங்கி எழுந்திருக்க வேண்டும். மக்கள் பொறுத்துக் கொண்டிருந்தது தவறு.
பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரை அனைவரும் வரவேற்றுள்ளனர். ஆக்கிரமிப்பு காஷ்மீரை இன்னும் கைப்பற்றவில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்றுள்ளதா என்று தெரியவில்லை. பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டார்களா? அழிக்கப்பட்டார்களா? என்று தெரியவில்லை. இதற்கிடையே நேற்று அமெரிக்கா தலையீட்டில் போர் நிறுத்தம் என்று செய்திகள் வருகின்றன. இதனையே இந்திய அரசும் தெரிவித்துள்ளது. 5-வது வல்லரசு நாடாக இந்தியா உள்ளது. நம்முடைய நிலமையை இன்னொரு நாடு முடிவெடுப்பது இருப்பது ஏற்புடையது அல்ல. போர் நிறுத்தம் என்பதை இந்தியா தான் அறிவிக்க வேண்டும். வேறு நாடு அறிவிப்பு தவறான முன்னுதாரணம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, மாநில பொதுச் செயலாளர் வே.க.அய்யர், மாவட்டச் செயலாளர்கள் பா.அதிக்குமார் குடும்பர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.செல்லத்துரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT