Published : 05 May 2025 08:03 AM
Last Updated : 05 May 2025 08:03 AM
ஒருவழியாக அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தேவிட்டதால், இனி எப்படி கூடுதல் தொகுதிகளைக் கேட்கமுடியும் என்ற கவலையில் இருக்கின்றன திமுக கூட்டணியில் இருக்கும் தோழமைக் கட்சிகள்.
சில வாரங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, தவெக என சிறிய கட்சிகளுக்கு 4 விதமான கூட்டணி வாய்ப்புகள் இருந்தன. அது இப்போது திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என இரண்டாக சுருங்கிவிட்டது. அதிமுக, தவெக ஆப்ஷன்கள் இருந்தவரை திமுக கூட்டணி கட்சிகள் தங்கள் பேர வலிமையை அதிகப்படுத்தலாம் என்று கனவுக் கோட்டை கட்டின. அதன் வெளிப்பாடாகவே தங்களுக்கு குறைந்தது 25 தொகுதிகள் வேண்டும் என விசிக நிர்வாகிகள் பொதுத்தளத்தில் கோரிக்கை வைத்தனர்.
சிபிஎம், சிபிஐ கட்சிகளும் அவ்வப்போது ஆட்சியின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி அழுத்தம் கொடுத்தன. காங்கிரஸ் தரப்பிலும் கூடுதல் தொகுதிகள், கூட்டணி ஆட்சி போன்ற வார்த்தை தூண்டில்களை வீசிப் பார்த்தனர். மதிமுக-வும் மனதில் ஆசையோடு இருந்தது. 2019 மக்களவைத் தேர்தல் முதலே திமுக கூட்டணிக்கு கைகொடுத்து வரும் விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு 2021 சட்டமன்றத் தேர்தலில் தலா 6 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியது திமுக. அதிலும் மதிமுக, உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வலியுறுத்தப்பட்டது.
விசிக-வும் தனிச் சின்னத்தில் போட்டியிட பெரிய போராட்டமே நடத்தியது. அப்போதே மிகக்குறைவான தொகுதிகளை பெற்றுவிட்டதாக திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு மனக்குமுறல் இருந்தது. அப்போது, ‘மீண்டும் அதிமுக - பாஜக அணி வெல்லக்கூடாது என்ற நோக்கத்துக்காக பொறுத்துக் கொள்ளுங்கள்’ என அவர்களுக்கு சமாதானம் சொல்லப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஒரு வருடமாகவே 2026 தேர்தலில் அதிக தொகுதிகள் வேண்டும் என, அதிமுக ஆப்ஷனைக் காரணம் காட்டி காய் நகர்த்த ஆரம்பித்தன திமுக தோழமை கட்சிகள். அந்தக் கனவும் இப்போது கலைந்து போய்விட்டது. பாஜக உடன் அதிமுக ஜோடி சேர்ந்ததால் திமுக கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக ஆப்ஷன் இனி அறவே இல்லை.
இன்னொரு வாய்ப்பென்றால் அது தவெக தான், ஆனாலும், அரசியலுக்கு புதியவரான விஜய்யை நம்பி ஆழம் பார்க்கும் தைரியம் யாருக்கும் இல்லை. அதனால் இவர்கள் முழுக்க முழுக்க திமுக கூட்டணியையே நம்பி இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. இதன் வெளிப்பாடாகவே, “கூட்டணி தர்மத்துக்காகவே பெரிய வாய்ப்புகளை தருவதாக சொன்ன அதிமுக, தவெக-வின் கூட்டணி அழைப்புகளை நிராகரித்தேன்” என திருமாவளவன் பேசி வருகிறார்.
கடந்த காலங்களில் தேர்தல் நெருக்கம் வரை கூட்டணி கணக்குகள் மாறிக்கொண்டே இருக்கும். அதனால் சிறிய கட்சிகள் பேர வலிமையின் மூலம் கூடுதல் தொகுதிகளை பெறும் சூழல் இருந்தது. தற்போது தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துவிட்டது. இதனால், பாஜக-வை எதிர்க்கும் கட்சிகளால் அதிமுக பக்கம் இனி செல்லவே முடியாது. எனவே வழக்கம் போல திமுக கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக்கொண்டு அமைதியாக போக வேண்டிய சூழலே இம்முறையும் உருவாகியுள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வருவதை தடுக்க, கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொண்டு நில்லுங்கள் என இம்முறையும் தோழமைக் கட்சிகளுக்கு திமுக சமாதானம் சொல்லும்.ஜனநாயகத்தில் பெரிய கட்சிகளுக்கு நிகராக வெவ்வேறு இலக்குகளை கொண்டு பயணிக்கும் சிறிய கட்சிகளும் முக்கியம்தான். இந்தத் தேர்தலில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை பெரிய கட்சிகள் வழங்குமா, இல்லை ‘பெரியண்ணன்’ மனப்பான்மையில் நடத்துமா என பொறுத்திருந்து பார்ப்போம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT