Published : 04 May 2025 12:51 AM
Last Updated : 04 May 2025 12:51 AM
சென்னை: மாநில உரிமைகளை எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருந்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே அனுமதியளித்து, முக்கிய தீர்ப்பை வழங்கியது.
இதை முன்னெடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கல்வியாளர்கள் சார்பில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. ‘மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு’ என்ற தலைப்பில் நடந்த விழாவுக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு மேளதாளம் முழங்க நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற இசை, கலை நிகழ்ச்சிகளை முதல்வர் கண்டு ரசித்தார். பின்னர் மேடையேறிய முதல்வருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு, செங்கோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. விருந்தினர்களும் கவுரவிக்கப்பட்டனர். சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு தலைவரும், ஆர்எம்கே கல்விக் குழும நிறுவன தலைவருமான ஆர்.எஸ்.முனிரத்தினம் வரவேற்புரை ஆற்றினார். விழாவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் முன்னிலை வகித்தார்.
ஏற்புரை நிகழ்த்தி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பாராட்டு விழா அழைப்பிதழில் ‘சுயாட்சி நாயகர்’ என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது உண்மையில் நான் அல்ல. அது தமிழக மக்களைத்தான் குறிக்கிறது. திமுவுக்கு ஓட்டு போட்டால் மு.க.ஸ்டாலின் அமைக்கும் ஆட்சி சமூகநீதி ஆட்சியாக, சமத்துவ ஆட்சியாக இருக்கும். மாநில சுயாட்சிக்காக கூட்டாட்சிக்காக இறுதிவரை அவர் போராடுவார் என்ற நம்பிக்கையோடு வாக்களித்த மக்களுக்குத்தான் வெற்றி.
பொதுவாக பாராட்டு விழா வுக்கு நான் ஒப்புக்கொள்வது இல்லை. இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்பதால் ஒப்புக்கொண்டேன். இது முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள், இந்திய மக்கள் அனைவருக்கும் உச்சநீதிமன்றம் மூலம் தமிழகம் பெற்றுத்தந்துள்ள வெற்றி.
மத்திய அரசு ஏஜென்ட்டான ஆளுநர், மக்களுக்கான திட்டங்களை நிறுத்தி வைப்பதென்றால், முதல்வர் எதற்கு, மக்கள் போடும் வாக்கு எதற்கு, தேர்தல் எதற்கு. ஆளுநர் பதவி ரப்பர் ஸ்டாம்ப் போன்றது.
பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ள இடம் மாநில அரசுக்கு உரியது. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது, மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்வது மாநில அரசு. ஆனால், பல்கலைக்கழகநிர்வாகத்தை கவனிக்கும் துணைவேந்தரை ஆளுநர் நியமிப்பது எந்த வகையில் நியாயம்.
அதனால்தான் நீதிமன்றம் சென்றோம். உச்ச நீதிமன்றமும் அரசியலமைப்பு வழி நின்று தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. பல ஆண்டு கால பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பூனைக்கு மணி கட்டப்பட்டுள்ளது. ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்து தீர்ப்பளித்துள்ளது. பிரதமருக்குரிய உரிமையை குடியரசுத்தலைவர் எடுத்துக்கொண்டால் சும்மா இருப்பார்களா.
நாடாளுமன்றத்துக்குத்தான் அதிக அதிகாரம் என்று குடியரசு துணை தலைவர் சொல்கிறார். நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். மாநிலத்தில் சட்டப்பேரவைக்குத்தான் அதிக அதிகாரம். தனிநபர் மரியாதை முக்கியம். எந்த காலத்திலும் மாநில உரிமைகளை விட்டுத் தரமாட்டோம். இதுதான் எனது கொள்கை.
நாட்டுக்கே முன்மாதிரியாக தமிழகம் உள்ளது. உலகத்துடன் போட்டி போட நம் இளைஞர்கள் இன்னும் வளர்ந்தாக வேண்டும். பகுத்தறிவுக்கு எதிரான, முட்டாள்தனமான கட்டுக்கதைகள், மூடநம்பிக்கைகளை பரப்பும் இடமாக கல்வி நிலையங்கள் இருக்க கூடாது. கல்வி நிலையங்களில் அறிவியல் பூர்வமான கருத்துகள், சமூக நீதியை மட்டுமே கற்பிக்க வேண்டும். இதற்கு மாறாக செயல்பட்டால் இந்த அரசின் எதிர்வினை கடுமையாக இருக்கும்.
மாணவர்களை படிக்கவிடக் கூடாது என தேசிய கல்விக் கொள்கை, விஸ்வகர்மா திட்டம் என புதிது புதிதாக பல திட்டங்களை கொண்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம் சமூக வலைதளங்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் சாதிய உணர்வை தூண்டும் பல சதிகள் நடக்கிறது. அடுத்த நூற்றாண்டுக்கு தேவையான கல்வியை மாணவர்களுக்கு தர கல்வியாளர்கள் உறுதியேற்க வேண்டும். எந்த தடை வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து உங்களை நாங்கள் படிக்க வைப்போம். நமக்கான உரிமைகளை மீட்டு உங்களை படிக்க வைப்பது அரசின் கடமை. இவ்வாறு முதல்வர் பேசினார்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் முதல்வரின் சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்' நூல் வழங்கப்பட்டது. விழாவில், விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், பாரத் பல்கலைக்கழக தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி.உள்ளிட்டோர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் முதல்வரை பாராட்டி பேசினர். அருணை கல்விக்குழும துணைத் தலைவர் எ.வ.குமரன் உள்ளிட்ட விழா குழுவினர் மற்றும் பல்கலைக்கழக தலைமை நிர்வாகிகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் அனைவரும் செல்போன் டார்ச் லைட்டை ஒளிரச் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT