Published : 03 May 2025 09:28 AM
Last Updated : 03 May 2025 09:28 AM
தமிழகத்தில் 1972-க்கு முன்பு வரைக்கும் காங்கிரஸுக்கும் திமுக-வுக்கும் இடையே தான் போட்டி என்ற நிலை இருந்தது. 1972-ல் எம்ஜிஆர், அதிமுக-வை தொடங்கிய பிறகு களம் திமுக-வுக்கும் அதிமுக-வுக்குமான போட்டியாக மாறிப்போனது. அதன் பிறகு கடந்த 53 வருடங்களாக காங்கிரஸால் விட்ட இடத்தை பிடிக்கவே முடியவில்லை.
அதிமுக-வும் திமுக-வும் தங்கள் தலைமையிலேயே கூட்டணிகளை கட்டமைத்து வருகின்றன. காங்கிரஸ் அதில் பத்தோடு பதினொன்றாகத்தான் ஒட்டிக் கொள்கிறது. இன்றைக்கு வந்த அண்ணாமலை, நயினார், சீமான், நடிகர் விஜய் போன்றவர்களைக் கூட முதல்வர் வேட்பாளர் என தெம்பாகச் சொல்கின்றன அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகள். ஆனால், ஒரு காலத்தில் தமிழகத்தை ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸுக்கு, ‘இவர் தான் எங்களின் முதல்வர் வேட்பாளர்’ என்று சொல்ல இப்போது தன்னம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.
ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்தக் கருத்தை தயக்கமின்றி பேசி இருக்கும் காங்கிரஸ் எம்பி-யான கார்த்தி சிதம்பரம், “தமிழக காங்கிரஸுக்கு எதிர்காலம் என்பது பெரும் சவாலானது. தமிழக அரசியலில் கட்சிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரு திராவிட கட்சிகளும் பலமாக உள்ளது. திமுக, தொண்டர்கள் ரீதியாக அடிப்படை கட்டமைப்பை பலமாக வைத்துள்ளது.
அடுத்தடுத்த தலைமுறைக்கான இளம் தலைவர்களை அக்கட்சி அறிமுகம் செய்து வருகிறது. அதை சீனியர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். இன்னும் 25 ஆண்டுகளுக்கு தேர்தல் ரீதியிலான பிரச்சினைகளை எதிர்க்கொண்டு திமுக நீடித்து நிற்கும். அதேபோல் அதிமுக-வையும் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தக் கட்சிக்கும் கிராம அளவில் வலுவான கட்டமைப்பு இருக்கிறது. அதனாலேயே அந்தக் கட்சியுடன் சேர்ந்து தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது பாஜக.
இரு திராவிட கட்சிகளும் வேண்டாம் என்ற தாக்கம் இருந்தாலும் மக்கள் எப்போது முடிவெடுக்கப் போகிறார்களோ அப்போதுதான் அது நிறைவேறும். அண்ணாமலை வருகைக்கு பின் தமிழகத்தில் பாஜக சற்று வளர்ந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், மக்களவை தேர்தல் வரும்போது, மட்டுமே பேசும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. திமுக, அதிமுக, தவெக போன்ற கட்சிகளில் ஒருவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும் போது காங்கிரஸில் மட்டும் அப்படியொரு நிலை இல்லையே என, மக்கள் யோசிக்கின்றனர்.
கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசவேண்டும். காங்கிரஸ் அப்படிப் பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தேசிய கட்சியாக தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தவேண்டும். நடை, உடை, பாவனையை மாற்றி தமிழகத்தில் அரசியல் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியாக காங்கிரஸ் வளரவேண்டும்; வரவேண்டும்” என்று மனதில் பட்டதைப் பளிச்சென சொல்லி இருக்கிறார்.
கார்த்தியின் இந்தக் கருத்தானது காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஆதரவையும் எதிர்ப்பையும் கிளப்பி வரும் நிலையில், இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சிவகங்கை பழனியப்பன், “தமிழகத்தில் பாஜக வளர்ந்திருந்தாலும் சிவகங்கை தொகுதியில் தொடர்ந்து காங்கிரஸ் தான் வெற்றி பெறுகிறது. கன்னியாகுமரியை விட, சிவகங்கை மாவட்டத்தில் காங்கிரஸ் வலுவாக இருந்தாலும் இடையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது. அதற்காக தொண்டர்களை உற்சாகப்படுத்த கார்த்தி சிதம்பரம் அப்படிப் பேசியிருக்கலாம். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை எதிர்பார்த்திருக்கும் கார்த்தி, அதற்காகவும் அப்படிப் பேசி இருக்கலாம்.
கட்சியிலுள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் பாஜக வளர்ந்திருக்கிறது; நாமும் வளரவேண்டும் என, கார்த்தி சிதம்பரம் பேசி இருப்பதாகவே நான் பார்க்கிறேன். ஆனால், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உற்சாகம் மிகுந்த மாநில தலைமை வேண்டும். சிறு பிரச்சினையாக இருந்தாலும் தொண்டர்கள் போன் செய்தால் தலைவர், நிர்வாகிகள் எடுத்துப் பேசி என்ன ஏதென்று கேட்க வேண்டும்.
ஆனால், காங்கிரஸ் நிர்வாகிகளில் பலரும் இரவு 9 மணிக்கு மேல் செல்போனை அணைத்து வைத்துவிடுகிறார்கள். இப்படி இருந்தால் தொண்டர்களுக்கு எப்படி உற்சாகம் வரும்? அதேபோல், பொதுப்பிரச்சினைகளுக்காக பொதுமக்கள் அழைத்தால் உடனே நாம் அங்கு செல்லவேண்டும். அதிகாரிகளிடம் முறையிட வேண்டும். மற்ற கட்சியினர் செய்வதை நாமும் செய்யவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதையெல்லாம் மனதில் வைத்தே கார்த்தி சிதம்பரம் அப்படிப் பேசி இருப்பார்” என்றார்.
கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியாக தமிழகத்தில் காங்கிரஸ் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார் கார்த்தி சிதம்பரம். ஆனால், மாநில தலைவரை மாற்ற வேண்டும் என டெல்லிக்கு மனு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இங்குள்ள காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT