Published : 02 May 2025 12:33 AM
Last Updated : 02 May 2025 12:33 AM
தமிழகத்தில் இன்று (மே 2) முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குப் பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 4, 5-ம் தேதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும், 6, 7-ம் தேதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்றும், நாளையும் சில இடங்களிலும், 4, 5-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும். தமிழகத்தில் மே 1-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கிளன்மார்கனில் 3 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, கெலவரப்பள்ளி அணை, நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர், பார்வூட், கூடலூர் சந்தை ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT