Last Updated : 30 Apr, 2025 07:54 AM

1  

Published : 30 Apr 2025 07:54 AM
Last Updated : 30 Apr 2025 07:54 AM

செகண்ட் இன்னிங்ஸ்... மீண்டும் தேர்தல் களத்துக்கு வருகிறாரா செஞ்சியார்?

இப்போதைக்கு சாக்குப் போக்குச் சொன்னாலும் பாஜக-வுடன் அதிமுக கூட்டணி சேருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால் இரண்டு கட்சிகளுக்குள்ளும் புது உற்சாகம் பீரிட்டு அடிக்கிறது. “வரட்டும் பார்க்கலாம்” என விட்டேத்தியாய் இருந்தவர்கள் எல்லாம் இப்போது தங்களுக்கான தொகுதிகளுக்கு துண்டு போட்டு இடம் பிடிக்கப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

2021 தேர்தலில், விழுப்​புரம் மாவட்​டத்தில் உள்ள 7 தொகுதி​களில் 4 தொகுதிகளை திமுக-​வும், 2 தொகுதிகளை அதிமுக-வும் வென்றன. ஒரே ஒரு தொகுதியை மட்டும் பாமக கைப்பற்​றியது. இம்முறை திமுக 4 தொகுதிகளை தனக்கு வைத்துக் கொண்டு 3 தொகுதிகளை கூட்ட​ணிக்கு ஒதுக்​கலாம் என்கி​றார்கள். தான் போட்டி​யிடும் நான்கு தொகுதி​களுக்கும் திமுக வலுவான வேட்பாளர்களை கைவசம் வைத்திருக்​கிறது.

ஆனால் அதிமுக தரப்பில், செஞ்சி, விழுப்​புரம், திருக்​கோ​விலூர் தொகுதி​களுக்கு திமுக-வுக்கு வலுவான போட்டியைத் தருமளவுக்கு தகுதியான வேட்பாளர்களை எங்கே போய்த் தேடுவது என அந்தக் கட்சி​யினர் வெளிப்​படை​யாகவே பேச ஆரம்பித்​திருக்​கி​றார்கள்.

இந்தச் சூழலில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் செஞ்சி ராமச்​சந்​திரனை மீண்டும் தேர்தல் களத்துக்கு கொண்டுவர அதிமுக தரப்பில் ஆலோசனைகள் நடப்பதாக செய்திகள் கசிகின்றன. திமுக-வில் 22 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஒருங்​கிணைந்த தென்னாற்காடு மாவட்​டத்தின் செயலாளராக இருந்தவர் செஞ்சி ராமச்​சந்​திரன். “கலைஞரின் தரைப்படை தளபதி” என திமுக-​வினரால் கொண்டாடப்பட்ட செஞ்சி​யார், திமுக-​விலிருந்து வைகோ விலகிய போது அவரோடு மதிமுக-வில் ஐக்கிய​மா​னார். பிற்பாடு திமுக-வுடன் மதிமுக கூட்டணி கண்டபோது மக்களவைத் தேர்தலில் வெற்றி​பெற்ற செஞ்சியார் மத்திய இணை அமைச்​ச​ரா​னார்.

அதன் பிறகு, வைகோவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீண்டும் செஞ்சியார் தாய்க்​கழ​கத்​துக்கே திரும்​பி​னார். அதே காலகட்​டத்தில் தேமுதி​க-வுக்குச் சென்ற முன்னாள் விழுப்​புரம் மாவட்ட திமுக செயலாளரான ஏ.ஜி.சம்​பத்தும் மீண்டும் திமுக-வுக்கே திரும்​பி​னார். ஆனால், இவர்கள் இருவருக்கும் விழுப்​புரம் மாவட்​டத்தில் பழையபடி கட்சிக்குள் உரிய மரியாதை கிடைக்​க​வில்லை. திமுக கூட்டங்​களுக்கு வரும் செஞ்சி​யார், ஏ.ஜி.சம்பத், முன்னாள் மத்திய இணை அமைச்சர் வேங்கடபதி ஆகியோரை “மும்​மூர்த்​திகள்” என காதுபடவே கழகத்​தினர் கலாய்த்த சம்பவங்​களும் உண்டு.

ஏ.ஜி.சம்பத்

இதனால், ஜெயலலிதா அழைப்பின் பேரில் செஞ்சியார் அதிமுக-வில் இணைந்​தார். சி.பி.​ரா​தாகிருஷ்ணன், பொன்னார் முயற்​சியில் பாஜக-வில் இணைந்தார் ஏ.ஜி.சம்பத். இவர்கள் இருவருக்குமே இப்போது மீண்டும் தேர்தல் யோகம் தேடிவர ஆரம்பித்​திருக்​கிறது. முன்னாள் அமைச்சர் மஸ்தானை எதிர்த்து, அதிமுக அமைப்புச் செயலாளரான செஞ்சியாரை செஞ்சி தொகுதியில் களமிறக்க அதிமுக தரப்பில் ஆலோசனைகள் நடப்ப​தாகச் சொல்கி​றார்கள்.

இதேபோல், கடந்த முறை பாஜக போட்டி​யிட்ட திருக்​கோ​விலூர் தொகுதியில் அமைச்சர் பொன்முடியை எதிர்த்து, இம்முறை பாஜக துணைத் தலைவரான ஏ.ஜி.சம்பத் நிறுத்​தப்​படலாம் என்ற பேச்சும் விழுப்​புரம் மாவட்ட அரசியலை வட்டமடிக்க ஆரம்பித்​திருக்​கிறது.

செஞ்சி தொகுதியில் இம்முறை நீங்கள் போட்டி​யிடப் போவதாகச் சொல்கி​றார்களே என்று செஞ்சி ராமச்​சந்​திரனிடமே கேட்டோம். “என்னை பொறுத்​தவரையில் என் அரசியல் அனுபவத்​தை​யும், சேவையையும் அதிமுக-வின் வெற்றிக்கு பயன்படுத்​தவேண்டும் என்று நினைத்து அதிமுக தலைமை என்னை அணுகினால் எந்தத் தொகுதி​யிலும் போட்டி​யிடத் தயார். ஆனால், யார் என்ன சொன்னாலும் கட்சி என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்​பட்​டுதான் இருப்​பேன்” என்றார்.

அதேபோல், திருக்​கோ​விலூர் தொகுதிக்கு நீங்கள் தான் இம்முறை வேட்பாளராமே என்று ஏ.ஜி.சம்​பத்​திடம் கேட்டதற்கு, “திருக்​கோ​விலூர், விழுப்​புரம் - இந்த ரெண்டு தொகுதி​களிலுமே எனக்கு போட்டியிட விருப்பம் தான். திமுக-​விலும் எனக்கான ஆதரவாளர்கள் இருக்​கி​றார்கள். அதனால ரெண்டு தொகுதி​களில் எங்கு நின்றாலும் திமுக அணி வேட்பாளரை வெகு சுலபமா என்னால் வீழ்த்த முடியும்” என்று அழுத்​த​மாகச் சொன்னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x