Published : 30 Apr 2025 07:53 AM
Last Updated : 30 Apr 2025 07:53 AM
பிரதானக் கட்சிகளின் தலைமைகள் எல்லாம் 2026 தேர்தலுக்கான கூட்டணிகளை கட்டமைப்பதில் மும்முரம் காட்டி வரும் நிலையில், மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு தோதான தொகுதிகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.
அந்த வகையில், மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் குறைந்தபட்சம் ஒரு தொகுதியை கூட்டணித் தலைமையிடம் காங்கிரஸ் கேட்டுப் பெறுவது வழக்கம். அதன்படி கடந்த தேர்தலில் மேலூர் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கியது திமுக. கடந்த முறை காங்கிரஸுக்கு மொத்தம் 25 தொகுதிகளை ஒதுக்கியது திமுக.
இதில் தென் மாவட்டங்களில் மட்டுமே மேலூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாடானை, காரைக்குடி, நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஸ்ரீவைகுண்டம், தென்காசி, சிவகாசி, ஆகிய 11 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் மேலூர், ஸ்ரீவில்லிபுத்தூரைத் தவிர மற்ற 9 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.
இந்த நிலையில், இம்முறை பாரம்பரிய காங்கிரஸ் தொகுதியான மேலூரை தவிர்த்துவிட்டு மதுரை நகருக்குள் ஏதாவதொரு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தரப்பில் இப்போதே காய்நகர்த்தலை தொடங்கிவிட்டனர்.
இதுகுறித்து பேசிய மதுரை தெற்கு தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளரும் பொதுக்குழு உறுப்பினருமான சையது பாபு, “2016-ல் மதுரை வடக்கு தொகுதியில் தற்போதைய மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் வெறும் 8 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தான் அதிமுக-விடம் தோற்றார். அதேபோல் மதுரை மத்திய தொகுதியில் 1984 தொடங்கி 2001 வரை காங்கிரஸும் தமாகா-வும் தலா இரண்டு முறை வென்றுள்ளன. ஆக, மதுரை மத்தியும் எங்களுக்கு சாதகமான தொகுதிதான்.
தற்போது மதுரை வடக்கில் திமுக மாவட்டச் செயலாளர் கோ.தளபதியும், மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் எம்எல்ஏ-க்களாக இருக்கிறார்கள். மதுரை மேற்கில் இம்முறை செல்லூர் ராஜூவை தோற்கடிக்க அமைச்சர் மூர்த்திக்கு திமுக தலைமை ஸ்பெஷல் அசைன்மென்ட் கொடுத்திருப்பதாக தெரிகிறது. அதனால், ஏற்கெனவே மேற்கில் போட்டியிட்ட அனுபவம் உள்ள தளபதியை அந்தத் தொகுதியில் செல்லூர் ராஜூவை எதிர்த்து திமுக நிறுத்தலாம் என்ற பேச்சு இருக்கிறது. அப்படி நடந்தால் மதுரை வடக்கு தொகுதியை காங்கிரஸுக்காக கேட்போம்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுக தலைமைக்கு நெருக்கமாக இருந்தாலும் அவர் மாநில அரசியலை விட்டு விலகி டெல்லி அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. சிறிது காலம் அவர் அரசியலை விட்டே ஒதுங்கி இருக்கப் போவதாகவும் ஒரு சிலர் சொல்கிறார்கள். அப்படி அவர் மத்திய தொகுதியில் போட்டியிடாமல் ஒதுங்கினால் மதுரை மத்தியை காங்கிரஸ் கட்சி கட்டாயம் கேட்டுப் பெற்று மீண்டும் அங்கு வென்று காட்டும்” என்றார்.
இதுகுறித்து மதுரை மத்திய தொகுதி திமுக நிர்வாகிகளிடம் பேசியபோது, “யார் சொன்னது... அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் மதுரை மத்தியில் போட்டியிட்டு அமைச்சராவது உறுதி. அதற்காகத்தான் தொடர்ச்சியாக தொகுதி முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். தொகுதி வளர்ச்சி பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அமைச்சர் மீண்டும் இந்தத் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று சொல்வதெல்லாம் யாரோ கிளப்பி விட்ட வதந்தி. இது அவரது காதுக்கும் வந்தது; சிரித்துக்கொண்டே கடந்துவிட்டார். தலைமை அவர் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறது. அவர் டெல்லி அரசியலுக்கு போகப் போவதாகச் சொல்வதும் அரசியல் எதிரிகள் அவருக்கு எதிராக பரப்பும் வதந்திகளே” என்றனர்.
சீட் வாங்குவது இருக்கட்டும்... கலகலப்புக்கு பேர்போன காங்கிரஸார் ஒற்றுமையாக இருந்து கை சின்னத்தை ஜெயிக்கவைப்பார்களா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT