Published : 29 Apr 2025 08:51 AM
Last Updated : 29 Apr 2025 08:51 AM

பூந்தமல்லி - போரூர் வரை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது!

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4-வது வழித்தடத்தில், பூந்தமல்லி - போரூர் வரையிலான பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது. சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

இவற்றில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.) ஒன்றாகும். கலங்கரை விளக்கம் - கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் - பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப்பாதையாகவும் அமைகிறது. பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அதிலும், போரூர் - பூந்தமல்லி பைபாஸ் இடையே பல இடங்களில் பொறியியல் கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இப்பாதையில் உயர்மட்டப்பாதை அமைக்கப்பட்டு விட்டது. அடுத்த கட்டமாக, தண்டவாளம் அமைக்கும் பணி, உயர்மட்ட மின்பாதை பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இந்த வழித்தடத்தில் ஒரு பகுதியாக, பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லை தோட்டம் வரையிலான 2.5 கி.மீ தொலைவுக்கு சோதனை ஓட்டம் மார்ச் .20-ம் தேதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இதன்தொடர்ச்சியாக, பூந்தமல்லி - போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரையிலான பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது.

இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், நிதி இயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அமைப்புகள் மற்றும் இயக்கத்தின் இயக்குநர் மனோஜ் கோயல், தலைமைப் பொதுமேலாளர்கள் ஏ.ஆர்.ராஜேந்திரன், (மெட்ரோ ரயில், சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு), எஸ்.அசோக் குமார், (வழித்தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), ஆலோசகர் எஸ்.ராமசுப்பு (மெட்ரோ ரயில் இயக்கம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் கூறுகையில்," இது, மெட்ரோ ரயில் திட்டத்தின் முன்னேற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திட்டத்தை செயல்படுத்துவதை நோக்கி நாங்கள் சீராக முன்னேறுகிறோம்” என்றார்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இந்த உயர்மட்ட வழித்தடம் பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து போரூர் சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை சுமார் 10 கி.மீ. நீளம் கொண்டது மற்றும் பூந்தமல்லி மெட்ரோ பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சோதனை மற்றும் செயல்பாட்டுக்கு, பூந்தமல்லி மெட்ரோ பணிமனை ஒருங்கிணைக்கும் மையமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x