Published : 29 Apr 2025 08:14 AM
Last Updated : 29 Apr 2025 08:14 AM
மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கான தொகுதிகளின் விகிதாச்சார எண்ணிக்கையை மத்திய அரசு குறைக்கப் பார்ப்பதாக குமுறுகிறார் முதல்வர் ஸ்டாலின். இதைத் தடுப்பதற்காக மாநில முதல்வர்களை ஒருங்கிணைத்து முதல்கட்ட ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தி இருக்கிறார்.
இந்த நிலையில், ஏற்கெனவே தொகுதி மறு சீரமைப்பின் போது காணாமல் செய்யப்பட்ட புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி மீண்டும் உருவாக்கப்படுமா என்ற கேள்வி புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மத்தியில் தற்போது மேலோங்கி வருகிறது. மன்னர்கள் அரண்மனை கட்டி ஆட்சி செய்த இடம் என்ற வரலாற்றுப் பாரம்பரியம் புதுக்கோட்டைக்கு உண்டு.
அந்த வகையில், 2004 மக்களவைத் தேர்தல் வரைக்கும் புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி தனியாக இருந்தது. ஆனால், அதற்கு அடுத்து வந்த தொகுதி மறு சீரமைப்பில் புதுக்கோட்டை தொகுதியில் இருந்த அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியுடனும், பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகள் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியுடனும், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை தொகுதிகள் திருச்சி மக்களவைத் தொகுதியுடனும், ஆலங்குடி தொகுதி சிவகங்கை மக்களவைத் தொகுதியுடனும், விராலிமலை தொகுதி கரூர் மக்களவைத் தொகுதியுடனும் சேர்க்கப்பட்டு புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டது.
இதைக் கண்டித்து அப்போதே புதுக்கோட்டை மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினார்கள். அந்த சமயத்தில் மத்தியில் திமுக கூட்டணி ஆட்சி தான் இருந்தது. புதுக்கோட்டை தொகுதியின் எம்பி-யாகவும் மத்திய அமைச்சராகவும் இப்போதைய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தான் இருந்தார். ஆனாலும் இந்த விஷயத்தில் திமுக-வோ ரகுபதியோ பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. தொகுதி மறு சீரமைப்பில் முதலில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிதான் நீக்கப்படுவதாக இருந்தது.
ஆனால், அப்போது மயிலாடுதுறை எம்பி-யாக இருந்த மணிசங்கர் ஐய்யர் முன்னேற்பாடாக காய் நகர்த்தி பேசவேண்டிய இடத்தில் பேசி தனது தொகுதியைக் காப்பாற்றிக் கொண்டார். புதுக்கோட்டைக்கு அப்படி மெனக்கிட யாரும் இல்லாமல் போனதால் தேர்தல் ஆணைய வரைபடத்திலிருந்து புதுக்கோட்டை தொகுதி காணாமல் போய்விட்டது என்ற கோபக் குரல்களும் அந்த சமயத்தில் கிளம்பி அடங்கின.
தொகுதியை இழந்த புதுக்கோட்டை மாவட்டத்து மக்கள் தங்களது எதிர்ப்பைக் காட்டும் விதமாக, அடுத்து வந்த தேர்தல்களில் நோட்டாவுக்கு வாக்களிப்பதை ஒரு இயக்கமாகவே நடத்தினார்கள். அதேபோல் இவர்களிடம் வாக்குக் கேட்டு வரும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும், அது தங்களால் முடியுமா முடியாதா என்றுகூட தெரியாமல், “புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீண்டும் உருவாக்க முயற்சிப்போம்” என வாக்குறுதிகளை வாரி வாழங்குவதை வழக்கமாக்கிக் கொண்டார்கள்.
ஒருகட்டத்தில், நம்பிக்கை இழந்துவிட்ட புதுக்கோட்டை மாவட்டத்து மக்களுக்கு, ‘தொகுதி மறு வரையறை’ என்று கிளம்பி இருக்கும் ஓர் ஒளிக் கீற்று மீண்டும் நம்பிக்கை விதையை விதைத்திருக்கிறது. அதனால், இந்த வரையறையின் போது மீண்டும் புதுக்கோட்டை தொகுதியை உருவாக்க வேண்டும் என்று குரலெழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து பேசிய சமூக ஆர்வலரும், வாசகர் பேரவை செயலாளருமான எஸ்.விஸ்வநாதன், “எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் புதுக்கோட்டை சமஸ்தானத்தை பிரிட்டீஷார் இந்தியாவுடன் இணைத்தனர். அத்தகைய பாரம்பரியத்தையும், புதுக்கோட்டையின் பெருமையையும் மீட்டெடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது. மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் போது புதுக்கோட்டை தொகுதி மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். இது குறித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அரசியல் கட்சிகளைச் சாராமல் சமூக அமைப்புகளை உள்ளடக்கி விரைவில் விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட இயக்கங்களை நடத்த உள்ளோம்” என்றார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவிடம் இது குறித்து கேட்டதற்கு, “கடந்த முறை நடைபெற்ற தொகுதி மறுவரையறையைப் போன்று மீண்டும் நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தும் போது புதுக்கோட்டை தொகுதி நிச்சயம் உருவாகும். எப்படி ஆயினும் புதுக்கோட்டை தொகுதியை போராடியாவது நான் மீட்டெடுப்பேன்” என்றார்.
புதுக்கோட்டை தொகுதியின் முன்னாள் எம்பி-யான சு. திருநாவுக்கரசரிடம் கேட்டதற்கு, “புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டது சட்டத்துக்குப் புறம்பானது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. மீண்டும் தொகுதி மறுவரையறை குறித்து குழு அமைக்கும் போது அந்தக் குழுவை நேரில் சந்தித்து புதுக்கோட்டை தொகுதியை மீண்டும் உருவாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT