Published : 29 Apr 2025 07:34 AM
Last Updated : 29 Apr 2025 07:34 AM
கட்சிக் கூட்டங்களுக்கு வருபவர்களுக்கு பிரியாணியுடன் குவாட்டரை மறைத்துக் கொடுத்த காலமெல்லாம் இப்போது மலையேறி விட்டது போலிருக்கிறது. அதனால் தான் திருக்கோவிலூரில் பிரியாணி விருந்துடன் பீர் பாட்டிலையும் பந்தியிலேயே பகிரங்கமாக பரிமாறி பகீர் கிளப்பி இருக்கிறார்கள். இந்தப் புரட்சியை செய்திருப்பது, “போதையை ஒழிப்போம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் ஆளும் கட்சிக்காரர்கள் என்பது இன்னுமோர் ‘சிறப்பு’.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருக்கோவிலூர் மேற்கு, கிழக்கு, வடக்கு ஒன்றியங்களைச் சேர்ந்த இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 27-ம் தேதி நடைபெற்றது. ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஐயனார், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் பூமாரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
திருக்கோவிலூரை அடுத்த சந்தைப்பேட்டை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் மதிய உணவு சகிதம் தடபுடலாக நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் ரிஷிவந்தியம் எம்எல்ஏ-வும், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான வசந்தம் கார்த்திகேயன், ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பெருநற்கிள்ளி ஆகியோர் கலந்துகொண்டு இளைஞரணியினர் வாக்குச் சாவடிகளில் செயல்பட வேண்டிய விதம் குறித்தும், சமூகவலைதளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை அறிந்து அதற்கு பதிலளிப்பது குறித்தும் வகுப்பெடுத்தனர். சுமார் 4 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் சுமார் முந்நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் மாவட்டச் செயலாளர் வசந்தம் கார்த்திகேயனும் தொகுதி தேர்தல் பொறுப்பாளரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதன் பிறகு, கூட்டத்தில் கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் மணக்க மணக்க பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது. அதுவரை எல்லாம் சரியாகவே சென்று கொண்டிருந்த நிலையில், அடுத்ததாகத்தான் அந்த ‘அரங்கேற்றம்’ நடந்தது. பிரியாணிக்காக இலையைப் போட்டவர்கள், தண்ணீர் பாட்டில் வைக்கும் முன்பாகவே இலையின் ஓரத்தில் பீர் பாட்டில்களை ‘இலைக்கு ஒன்றாக’ வரிசையாக வைத்து அதிரச் செய்தனர்.
இதைப் பார்த்த இளைஞரணியினர் பலரும் உற்சாக மூடில் பந்தியில் அமர்ந்து, ஒரு கையில் பீர் பாட்டிலும் மறு கையில் பிரியாணியுமாக காட்சியளித்தனர். இதை சிலர் செல்ஃபி எடுத்தும் வாட்ஸ் அப்பிலும் சோஷியல் மீடியாவிலும் வைரலாக்கினர். திமுக நிகழ்ச்சியில் இளைஞரணியினருக்கு இப்படி பீர் பாட்டிலுடன் பிரியாணி விருந்து வைத்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, ‘போதைக்கு எதிராகவும் மது ஒழிப்பை ஆதரித்தும் திமுக தலைமை பேசி வரும் நிலையில், அக்கட்சியின் நிர்வாகிகளே இப்படி மது கலாசாரத்தை ஊக்குவிக்கலாமா?’ என பலரும் சமூகவலைதளங்களில் வாள்வீச ஆரம்பித்தார்கள்.
10 மாதங்களுக்கு முன்பு நடந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளின் ரணங்கள் இன்னும் முற்றாக ஆறாத நிலையில், அதே மாவட்டத்தில் திமுக-வினர் வைத்த இந்த பீர் - பிரியாணி விருந்து கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், இதுகுறித்து கருத்தறிய ரிஷிவந்தியம் எம்எல்ஏ-வும் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான வசந்தம் கார்த்திக்கேயனை தொடர்பு கொண்டோம். போனை எடுத்துப் பேசிய அவரது உதவியாளர் சதீஷ், எம்எல்ஏ சட்டப் பேரவை கூட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து கூட்ட ஏற்பாட்டாளர்களில் ஒருவரான திருக்கோவிலூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பூமாரி கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். “சார், கூட்டம் முடிந்ததும் விருந்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு நாங்க மற்றொரு நிகழ்ச்சிக்காக மணலூர்பேட்டை சென்றுவிட்டோம். அப்போது விருந்துக் கூடத்தில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த சிலர் பீர் பாட்டிலை வாங்கிவந்து அருந்தியுள்ளனர். மற்றபடி நாங்கள் யாருக்கும் எந்த மதுவும் வாங்கிக் கொடுக்கவில்லை” என பவ்யமாகப் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்துக் கொண்டார்.
போதையின் பாதையில் செல்லாதீர்கள் என இளைஞர்களை மன்றாடிக் கேட்டுக் கொண்டு வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவரது கட்சியினரோ இளைஞரணி கூட்டத்தில் இப்படி பீர் விருந்து வைத்து அவரது தூக்கத்தைப் பறித்துக் கொண்டிருக்கிறார்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT